பள்ளிப் பருவத்தில், நான் படித்த அரசுப்பள்ளியில் நூலகம் என்ற ஒன்று இருக்கவில்லை. எங்களூரில் ஒரு வாசிப்பு சாலை இருந்தது. நாளிதழ்கள், வார இதழ்களுக்கு மேலே புத்தகங்கள் என்று பெரிதாக சொல்லிக்கொள்ளும்படியாக அங்கு எதுவும் இருந்ததாக நினைவில்லை.
பதின்வயதில் நானாக பஸ் ஏறி நாகர்கோவில் செல்ல ஆரம்பித்த பின் செய்த முதல் காரியம், நாகர்கோவில் மைய நூலகத்தில் உறுப்பினர் அட்டை வாங்கியது. அப்போது மைய நூலகம் ஒழுகினசேரி டென்னிஸ் கிளப் அருகே ஒரு பழைய இரண்டு அடுக்கு கட்டிடத்தில் இருந்தது. கீழ்தளத்தில் நாளிதழ்களும், மேகஸின்களும், மேல் தளத்தில் புத்தகங்களும். எப்போதும் கீழ்தளத்தில் தூங்கி வழிந்தும், சோர்ந்த கண்களுடனும் சிலர் இருப்பார்கள். பெரும்பாலும் மத்திய வயதை கடந்தவர்கள் அல்லது வயசாளிகள். unwelcoming ambience என்பதை அந்த ஹாலின் எல்லா பக்கமும் உணரலாம். அதைத்தாண்டி மேல்தளம் சென்றால், அங்கே ஒரு அம்மணி (லைப்ரரியன்) உக்கிரமான பெண்தெய்வங்களை நினைவுறுத்துவது போல, எதற்காக வந்தாய் என்பது போல அமர்ந்திருப்பார். அவரைத்தாண்டிச் சென்றால் ஆறு புத்தக ரேக்குகள். ஒருவர் மட்டுமே சென்று வர இடைவெளி இருக்கும். கிட்டதட்ட அரை இருட்டில், காற்றே வராத அந்த இடத்தில் புத்தகங்களை தேடி எடுத்து வரும்போது வியர்வையில் நனைந்து பரிதாபமான ஒரு நிலையில் இருப்பேன். இப்போது யோசித்துப்பார்க்கும் போது அந்த அம்மணி எப்போதும் கோப நிலையில் இருந்ததின் காரணம் புரிகிறது. ஒருவர் தினமும் எட்டு மணி நேரம் அந்த இடத்தில் இருந்து வேலை செய்வது என்பது கிட்டதட்ட தன்டணையே தான்.
வேலை நிமித்தம் அமெரிக்கா வந்த பின், இதுவரை ஐந்து வெவ்வேறு மாகாணங்களில், வெவ்வேறு ஊர்களில் வசித்திருக்கிறேன். அந்த ஊர்களின் நூலகங்களை நன்றாக உபயோகித்திருக்கிறேன். எந்த ஓரு நூலகத்திலும் unwelcoming ஆக உணர்ந்ததேயில்லை. மாறாக, எல்லா நூலகங்களுமே வாசகர்கள் வர வேண்டும், குடும்பமாக வர வேண்டும், குழந்தைகளோடு வர வேண்டும் என்ற ரீதியிலேயே செயல்படுகிறார்கள். குழந்தைகளுக்கான தனி section இல்லாத எந்த நூலகத்தையும் இங்கு பார்த்ததேயில்லை. குழந்தைகளை சிறு வயதிலேயே புத்தகங்களுக்கும் நூலகங்களுக்கும் அறிமுகப்படுத்துவதால் அந்த குழந்தைகளும் நல்ல manners and maturity யோடு வளர்கிறார்கள்.
சமீபத்தில் ஃப்ரிஸ்கோ நூலகத்திற்கு செல்லும் வாய்ப்பு கிடைத்தது. புதியதாக கட்டப்பட்ட இந்த நூலகம் architecture மற்றும் kid-centric approachக்காக தேசிய அளவில் பேசப்பட்டது.




என்னைப்போன்ற பின்புலத்திலிருந்து வரும் ஒருவனுக்கு இந்த நூலகம் அளிக்கும் ஆச்சர்யம் வார்த்தைகளால் விவரிக்கமுடியாதது. நான் சென்றது ஒரு ஞாயிறு காலை. அப்போது கூட எத்தனை எத்தனை குழந்தைகள், குடும்பங்கள் நூலகம் நோக்கி வருவதை காணும் போது மனதில் ஒரு இனம்புரியா மகிழ்ச்சி, கூடவே ஒரு ஏக்கம் என்றாவது நம்மூரிலும் இதைப்போல் குழந்தைகளும் உபயோகிக்கும் வண்ணம் நூலகங்கள் வராதா என்று.