பட்டாம்பூச்சி விளைவு

சரியாக பத்து நாட்கள் ஆகிறது – ஜெயமோகன் தளத்தில் ‘டாலஸ் சந்திப்பு’ தலைப்பில் நண்பர் ப்ரதீப் அவர்களின் பதிவைப் படித்து. 

ஜெமோ தன் தளத்தில் கடிதங்களை வெளியிடும்போது, பெரும்பாலும்   புகைப்படங்களுடன் சேர்த்து  வெளியிடுவதைக் கண்டு முன்பெல்லாம் நான் நினைத்ததுண்டு, எதற்காக புகைப்படங்களையும் சேர்த்து வெளியிடுகிறார் என. ஆனால் அந்த பதிவில் அவர் ‘டாலஸ் சந்திப்பு’ புகைப்படத்தை இணைத்திருக்காவிட்டால் கீழ் வரும் எதுவுமே நடந்திருக்காமல் போயிருக்கலாம். 

அந்த புகைப்படத்தை பார்த்த உடனே அதில் இருந்த செந்தில் அவர்களை அடையாளம் கண்டு கொண்டேன். செந்தில் நான் வசிக்கும் அதே பகுதியில் வசிப்பவர் மற்றும் இருமுறை அப்பகுதி தமிழர்கள் கூடிச் சந்தித்த போது அறிமுகம். பழகுவதற்கு எளிமையானவர், இனிமையானவர் என்பதோடு எங்கள் பக்கத்து மாவட்டத்துக்காரர் என்பதால் மனதில் பதிந்திருந்தார். அந்த புகைப்படத்தில் அவரைப் பார்த்த போது ஆச்சர்யமாக இருந்தது. அவர் தனக்கு இலக்கிய ஆர்வம் உண்டு என்றோ, தான் யூடூபில் திருக்குறள் சேனல் நடத்திவருவது குறித்தோ அந்த இரு சந்திப்புகளிலும் காட்டிக் கொள்ளவில்லை (அல்லது நான் கவனித்திருந்திருக்கவில்லை). அடுத்த முறை அவரைச் சந்திக்கும் போது டாலஸ் விஷ்ணுபுரம் வாசகர் வட்டம் பற்றி கேட்டு தெரிந்துக் கொள்ள வேண்டும் என்று நினைத்துக் கொண்டேன்.  The universe listens என்பது போல, அடுத்த நாளே, அவர் எங்கள் பகுதி வாட்ஸாப் தமிழ்க் குழுவில், விஷ்ணுபுரம் இலக்கியவட்டம் சார்பாக நடக்க இருக்கும் கம்ப ராமாயணக் கச்சேரி குறித்த அறிவிப்பை அவர் வெளியிட, அவர் நம்பரைக் குறித்துக் கொண்டு அவருக்கு ஒரு மெசஜ் தட்டலாம் என டைப் செய்துக் கொண்டிருக்கும் போதே, ஏதோ வேலை வர, அவசரத்தில் தவறுதலாக, அறைகுறை மெசஜ் அவருக்கு  போய்விட, அதை உடனடியாக டெலிட் செய்து விட்டு வேலையில் மூழ்கி விட்டேன். 

சாயங்காலமாக அவரிடமிருந்து ஒரு குறுந்செய்தி ‘தொடர்பு கொள்ள முயற்சி செய்தீர்களா’ என. உடனே அவரை போனில் அழைத்து ‘நீங்க திருநெல்வேலி செந்தில் தானே, நான் கணேஷ், நாகர்கோவில், இதற்கு முன்பு இருமுறை சந்தித்திருக்கிறோம்’ என அறிமுகப்படுத்திக் கொள்ள, அவர் ‘உங்கள் குரலை வைத்து அடையாளம் தெரிகிறது’ என்க, மலையாள வாசம் வீசும் நம் தமிழைத்தான் அப்படி நளினமாக சொல்கிறார் என நினைத்து லேசாக மனதில் சிரித்துக் கொண்டே, அவரிடம் நான் ஜெயமோகன் தளத்தை வாசிப்பதைக் குறித்தும், அதில் அவரின் புகைப்படத்தைப் பார்த்ததையும் சொன்னேன். அவருக்கும் ஆச்சர்யம். அவர் டாலஸ் விஷ்ணுபுரம் வாசகர் வட்டம் இரு வாரங்களுக்கு ஓரு முறை நூலகங்களில் சந்தித்து உரையாடுவதைப் பற்றி கூறி, வரும் ஞாயிறன்றும் ஃப்ரிஸ்கோ நூலகத்தில் கூட இருப்பதாகவும், முடிந்தால் வாருங்களேன் என அழைக்க, இலக்கியச் சந்திப்புகளில் பங்குபெறும் அளவிற்கு நமக்கு வாசிப்பு தகுதி இருக்கிறதா என்று உள்ளுக்கள்ளே ஒரு கேள்வி எழ, ஆனாலும் ஒருமுறை சென்று பார்க்கலாமே என்று அவரிடம் வருகிறேன் என்று சொல்லிவிட்டேன். அவர் வாட்சப் குரூப்பில் என்னை சேர்த்துவிடவும், சிறிது நேரத்தில் பிரதீப் அவர்கள் அழைத்து பேசினார்.

பிரதீப் அவர்களிடம் பேசும் போது நான் 2022ல் ஜெமோ டாலஸ் வந்திருந்த போது அந்நிகழ்ச்சிக்கு வந்திருந்ததைப் பற்றி கூற, அவர், ‘அப்படியா, அந்நிகழ்ச்சியில் எடுத்த புகைப்படம் இருந்தால் அனுப்புங்களேன், என்னால் அடையாளம் கண்டு கொள்ள முடிகிறதா எனப் பார்க்கிறேன்’ எனக் கூறி, வரும் ஞாயிறன்று நடைபெற இருக்கும் இலக்கியச் சந்திப்பு பற்றியும், டாலஸ் விஷ்ணுபுரம் வாசகர் வட்டம் பற்றியும் சுருக்கமாக விளக்கினார். நான் நமக்கு வாசிப்பு தகுதி இருக்கிறதா என எனக்குள் இருக்கும் தயக்கத்தை வெளிப்படுத்த, ‘பரவாயில்லை, வாருங்கள். இது நட்பார்ந்த கலந்துரையாடல்’ என்று ஊக்கப்படுத்தினார். சிறிது நேரத்திலேயே ஞாயிறன்று கலந்துரையாடுவதற்கான நான்கு கதைகளின் சுட்டியையும் கொடுத்து உதவினார். 

அந்த இலக்கியச் சந்திப்பிற்குப் பின் அவர்களிடமிருந்த ஏதோ ஒரு பொறி, என்னுள் அணைந்திருந்த கங்குகளை பற்ற வைத்ததைப் போல், மீண்டும் மீண்டும் அந்த கலந்துரையாடல் மனதுக்குள்ளே ஓடிக் கொண்டிருக்கவே, அதைப் பற்றிய நினைவுக்குறிப்புகளை பதிவு செய்யலாம் என்று தமிழில் தட்டச்சு செய்யலாம் என்று ஆரம்பித்து – கவனிக்க, நான் முன் பின்னே  தமிழில் தட்டச்சு செய்து பழக்கமில்லாதவன் – அது அப்படியே ஓரு வலைத்தளத்தை ஆரம்பிக்க வைத்தது. இப்போது திரும்பிப் பார்க்கும் போது, இந்த பத்து நாட்களில் கிட்டத்தட்ட 4000 வார்த்தைகள் தமிழில் டைப் செய்துள்ளேன். தினமும் மீண்டும் தமிழில் படிக்க , ஆழ்ந்து படிக்க ஆரம்பித்துள்ளேன். 

உலகில் எங்கோ ஓரு மூலையில் ஒரு பட்டாம்பூச்சி சிறகடிப்பதற்கும், வேறொரு மூலையில் சுனாமி வருவதற்கும் சம்பந்தம் இருக்கலாம் என்பது போல, எங்கோ இருந்து ஜெமோ வெளியிட்ட ஒரு பதிவு என்னுள் ஏற்படுத்திய மாற்றங்களை நினைத்துப் பார்க்கிறேன். 

கைகாரி தோசை!

அ.முத்துலிங்கம் அவர்களின் ‘ஒரு சாதம்’ கதையை படித்திருக்கிறீர்களா? எனக்கு மிகவும் பிடித்த சிறுகதைகளில் ஒன்று. படிக்க எளிமையான ஆனால் மிக சுவாரஸ்யமான கதை. அ.முத்துலிங்கம் அவர்கள் ஒரு master story teller என்பதற்கு எவ்வளவோ உதாரணங்களை சொல்லலாம், ஆனால் எனக்கு மிகவும் பிடித்த கதைகளுள் இது ஒன்று. ஒரு சிறுகதைக்குள்ளே எத்தனை தகவல்கள், உட்கதைகள். கதைக்குள்ளே அவ்வையார் வருகிறார், காந்தி வருகிறார், ராமாயணம் வருகிறது, benzene அணு அடுக்கு முறை வருகிறது, முருகனின் சூரசம்ஹாரம் வருகிறது, chaos theory வருகிறது, கம்பியுட்டர் ப்ரோக்கிரம் வருகிறது. கொஞ்சமும் தொய்வில்லாத நடையில் எழுதபட்ட, எத்தனை முறை படித்தாலும் சலிக்காத கதை. இந்த கதை கிட்டதட்ட 30 வருடங்களுக்கு முன்பே எழுதப்பட்டது என்பது ஆச்சர்யமே.

சமீபத்தில் டாலஸ் நகர விஷ்ணுபுரம் இலக்கிய வட்ட வாசகர் சந்திப்பு கலந்துரையாடலுக்காக தேர்ந்தெடுக்கப்பட்ட நான்கு சிறுகதைகளில் இதுவும் ஒன்று. நீண்ட நாட்களுக்கு பிறகு தமிழில், அதுவும் அ.முத்துலிங்கம் அவர்களின் கதையைப் படிக்க பரிந்துரைத்த வாசகர் வட்ட நண்பர்களுக்கு நன்றி.

கதையின் தொடக்க பத்தியிலேயே, ‘வீட்டினுள்ளே சிவலிங்கம் ஒரு சாரமும், பனியனுமாக நின்றான்’, அதுவும் குளிர்காலத்தில் என்று படிக்கும்போதே, ‘ஆகா, நம் இனமடா’ என்று தோன்றியதை தவிர்க்க முடியவில்லை. தமிழ்நாட்டில் குமரி, நெல்லை மாவட்டக்காரர்களைத்தவிர, மற்றவர்கள் சாரம் என்பதை லுங்கி என்றே அறிந்திருப்பார்கள்.

கதையின் துவக்கத்திலேயே கதை மாந்தர்களின் பின்புலம் மற்றும் அவர்களின் குணங்களை நுணுக்கமாக காட்டிவிட்டு கதை ஜெட் வேகத்தில் செல்கிறது. சிவலிங்கம் தன் ஆரம்ப கால கனடா அனுபவங்களை பகிரும்போது பரமனாதன் இடத்தில் நாமே இருந்து கேட்பது போலவே இருந்தது.

Choas theoryஐ அவ்வையாரின் ‘வரப்புயற’ பாட்டை கொண்டு விளக்கியிருப்பது அருமை. அதே போல, ‘ஜானகியைக் கவர்ந்த காதல் எங்கே ஒளிந்த்திருக்கிறது என்று ராவணுனுடைய உடலை கூரிய அம்பினால் ஒட்டை போட்டு, ஒட்டை போட்டு தடவிப் பார்த்ததாம் ராமனுடைய பாணம். அதுபோலத்தான் எங்கேயோ ஒளிந்திருக்கும் அந்த பிழையைத் துருவித் துருவி தேடிப் பார்க்கிறேன்.’ என்ற வரிகளைப் படிக்கும் போது, எப்படி இவரால் இப்படியெல்லாம் சிந்திக்க முடிகிறது என்ற ஆச்சரியம் எழாமல் இல்லை.

கதையின் முடிவில், ‘oru sadham’ என்பது ஒரு சாதம் அல்ல, ஒரு சதம் என்பது தெளிவாகும் தருணத்தில்,பரமனாதனோடு சேர்ந்து நமக்கும் வரும் புன்னகை, கதையின் வெற்றி.

இந்தக் கதையை வாசிக்கும்போது எனக்கு ஒரு பழைய ஞாபகம் வந்தது. சுமார் பதினைந்து வடங்களுக்கு முன்பு நாங்கள் சிக்காகோவில் இருந்த போது, பக்கத்து ஊரில் ஒரு புதிய இந்தியன் ரெஸ்டாரண்ட் திறந்தார்கள். நண்பர்கள் அந்த புதிய இடத்தில் சாப்பிட்டுவிட்டு மிக நன்றாக இருக்கிறது என்று கூறவே, நானும் மனைவியும் ஒரு மாலை அங்கு சென்றோம். மெனு கார்டில் நிறய புதுப்புது ஐட்டங்கள். தோசை வரிசையில், புதிதாக கைகாரி தோசை என ஓன்று இருந்தது. வட இந்தியர்களால் நடத்தப்படும் ரெஸ்டாரென்ட் என்பதால் ‘Bikaniri’ போல கைகாரி ஏதோ ஊர் பெயராக இருக்கும் என்றெண்ணி மனைவி அதை ஆர்டர் செய்தார். சர்வரும் கைகாரி தோசை என்றே ஒப்பித்துவிட்டு சென்றார். சில நிமிடங்களில் தோசையும் வந்தது. நல்ல திட்டமான தோசை மேல் கேரட், பீட்ரூட், கொத்தமல்லி, கீரை எல்லாம் போட்டு.

அப்போது தான் எங்களுக்கு புரிந்தது, vegetable dosa எனபதைத்தான் அவர்கள் ‘kaikari dosa’ என்று போட்டிருக்கிறார்கள் என்று அதாவது காய்கறி தோசை!

‘oru sadham’,ஒரு சாதம் ஆனதைப்போல, ‘kaikari dosa’ஐ கைகாரி தோசை என்று படித்த எங்களை நினைத்து சிரித்துக்கொண்டேன்!