அன்பே சிவம்

சமீபத்தில் ஒரு அவசர வேலையாக, கடை மூடப்போகும் கடைசி நேரத்தில் காஸ்ட்கோவிற்கு செல்ல வேண்டியிருந்தது.அவசரமாக வேண்டிய பொருளை எடுத்துக் கொண்டு, செக்-அவுட் கவுண்டரில் வரிசையில் நின்றேன். என் முன்னால் நின்றிருந்த ஒருவரின் கார்ட்(cart) முழுக்க நிரம்பியிருந்தது. கவுண்டரில் இருந்தவர் வயதான கேஷியர்; நாள் முழுவதும் நின்று கொண்டே வேலை செய்து சோர்வடைந்திருந்தார். மேலும், அவரின் ஷிப்ட்  முடியும் நேரம் என்பதால் முகத்தில் அந்த சோர்வு தெளிவாகத் தெரிந்தது. ஆனால் வரிசையில் நின்றிருந்த அந்த நபருக்கு, கொஞ்சமாவதுஉதவலாமே, சிலபொருளையாவதுஎடுத்து வைக்கலாமே என்ற சிந்தனை கூட வரவில்லை. எல்லாவற்றையும் அந்த வயதான கேஷியர் தனியாகச் செய்யட்டும் என்கிற மாதிரி அப்படியே சும்மா பார்த்துக்கொண்டே நின்று கொண்டிருந்தார்.

அந்தக் காட்சியைப் பார்த்தவுடனே என் மனதில் பல கேள்விகள் எழுந்தன. ஒரு சிறிய உதவியைக் கூட செய்ய விருப்பமில்லாத இந்த மனிதர், வீட்டில் எப்படிப்பட்டவராக இருப்பார்? தன் மனைவி, பிள்ளைகள், குடும்பத்தாரிடம் எவ்வளவு சுமையை போட்டிருப்பார்? இப்படிப் பொது இடத்தில் கூட சுயநலம் காட்டுகிறவர், தனிப்பட்ட வாழ்க்கையில் எவ்வளவு கருணையற்றவராக இருக்கக் கூடும்?

சில நேரங்களில் இப்படிப்பட்ட சாதாரணமான தருணங்களில்தான் ஒருவரின் உண்மையான மனிதநேயம் அல்லது சுயநலம் தெளிவாக வெளிப்படுகிறது. நல்லவேளையாக என் சொந்த அனுபவத்தில் பெரும்பாலும் கருணையாளர்களையே சந்தித்து இருக்கிறேன்.

நான் முதல் முறை அமெரிக்கா வந்தபோது மில்வாக்கி என்ற ஊரில் நடந்த சம்பவம். வந்த இரண்டாவது நாளில், போன் சார்ஜர் பழுதாகிப் போகவே, வேறு சார்ஜர் வாங்க பக்கத்தில் இருந்த ரேடியோஷாக் கடைக்கு அறை நண்பனுடன் சென்றிருந்தேன். அப்போதெல்லாம் எலக்ட்ரானிக்ஸ் பொருட்கள் வாங்க, ரேடியோஷாக் மிகப் பிரபலம்.   கடைக்கு வெளியே, ஒரு முதிய வெள்ளையர் ஏதோ உபகரணங்களை மாட்டிக் கொண்டிருந்தார். நாங்கள் கடையில் இருந்து வெளியே வந்த போது தான் தெரிந்தது அது டெலஸ்கோப் என்று. ஆர்வமுடன் நாங்கள் பார்ப்பதை கவனித்த அவர், ‘நிலவைப் பக்கத்தில் பார்த்திருக்கிறீர்களா? வந்து பாருங்கள்’ என்றழைக்கவே, முதல் முறையாக டெலஸ்கோப் மூலமாக நிலவைப் பார்த்து வாயடைத்துப் போனேன். நிலவின் மலைப் பரப்புகள், க்ரேட்டர்ஸ் என இதுவரை கண்டிராத நிலவை அன்று பெயர் கூடத் தெரியாத அந்த அமெரிக்கர் காட்டினார். இப்போது யோசித்துப் பார்க்கும் போது, முற்றிலும் அந்நியர்களாகிய எங்களை அன்று அவருடைய விலை உயர்ந்த டெலஸ்கோப்பை பயன்படுத்து அழைத்தது அவரின் பெருந்தன்மையும், சக மனிதர்களின் மேல் அவருக்கிருந்த நம்பிக்கையும் அல்லவா. இந்த சம்பவம் நடந்து கிட்டத்தட்ட பதினாறு வருடங்கள் ஓடி விட்டன. இன்னும் கூட அந்த பெயர் தெரியாத அந்த முதிய அமெரிக்கரின் முகமும் அந்த சம்பவமும் நினைவில் இருக்கிறது. (அதன் பின்னே டெலஸ்கோப் பித்துப் பிடித்து, இந்தியா திரும்பும் போது நானும் ஒரு டெலஸ்கோப் வாங்கிக் கொண்டு போனது தனிக்கதை.) 

திருமணமான சில மாதங்களில் நாங்கள் சிகாகோவில் இருந்தோம். அப்போது குறுகிய கால ப்ராஜக்ட் என்பதால், எப்போது வேண்டுமானலும் திருப்பி அனுப்பப்படலாம் என்றிருந்ததால், முடிந்தவரை அமெரிக்காவை சுற்றிப் பார்க்கலாம் என்று அக்டோபர் மாதத்தில் நயாகரா நீர் வீழ்ச்சியைக் காணச் சென்றிருந்தோம். அது ஆஃப் சீசன் என்றோ, அந்த நேரத்தில்  நயாகராவில் கிட்டத்தட்ட எல்லாமே மூடப்பட்டிருக்கும் என்றோ எங்களுக்கு தெரிந்திருக்கவில்லை. மதிய உணவிற்காக, கூகுளில் தேடிப் பார்த்த போது, பக்கத்திலேயே ஒரு பஞ்சாபி ஹோட்டலைக் காண்பிக்க, நாங்களும் உள்ளே சென்று விட்டோம். உள்ளே நுழைந்த பின்தான் தெரிந்தது, ஆஃப் சீசன் என்பதால் அந்த ஹோட்டல் அப்போது தற்காலிகமாக மூடப்பட்டிருந்தது. ஆனாலும் மதிய உணவு நேரத்தில் சென்றதால், அந்த ஹோட்டலின் ஒரு பகுதியிலேயே குடியிருந்த அந்த ஹோட்டலின் உரிமையாளர் குடும்பத்தினர் அவர்களுக்காக சமைத்திருந்த உணவை எங்களுடன் பகிர்ந்து கொண்டது மறக்க முடியாததது. அதன் பின்பு பஞ்சாபிகள் மீதான என் மதிப்பு பல மடங்கு கூடிப் போனது. “பகிர்ந்து உண்டு உண்” என்பதற்கு ஈடான பதம் பஞ்சாபியில் இருக்கிறதா என்று தெரியவில்லை, ஆனால் அன்று அவர்கள் செய்தது அதைத்தானே! முன்பின் தெரியாதவர்களிடம் தங்கள் உணவைப் பகிர்ந்து கொள்ள அவர்கள் எத்தனை கருணை உள்ளவர்களாக இருக்க வேண்டும். 

கோர்டன் ஹென்றியை நாங்கள் சந்திக்கும் போது அவருக்கு வயது 70களில் இருந்திருக்கலாம். கைத்தடியுடன் தான் வாக்கிங் வருவார். ஆனால் கைத்தடி நடப்பதற்காக அல்ல, பாம்பு போன்ற ஜந்துகளிடமிருந்து பாதுகாத்துக் கொள்ள என்று புன்னகையோடு சமாளிப்பார். அப்போது நாங்கள் ஃபோர்ட் வொர்த் நகரத்திலிருந்தோம். மாலை நேரங்களில் ட்ரினிட்டி ஆற்றோரமாக வாக்கிங்  செல்வது வழக்கம். அன்றைய காலகட்டத்தில் அங்கு வாக்கிங் செல்பவர்கள் குறைவு. அதுவும் வார நாட்களில் விரல் விட்டு எண்ணும் அளவிலேயே ஆட்கள் இருப்பார்கள். அப்படி ஒரு வார நாளில் ட்ரினிட்டி ஆற்றோரமாக வாக்கிங்  செல்லும் போது தான் கோர்டன் ஹென்றியை சந்தித்தோம். தன் கைத்தடியை மோனோபோட் போலப் பயன்படுத்தி அன்று அவர் ஒரு பறவையை புகைப்படம் எடுத்துக் கொண்டிருந்தார். போட்டோகிராஃபி மற்றும் பறவைப் பார்த்தல் இரண்டிலும் ஆர்வம் இருந்ததால் அவர் ஃபோட்டோ எடுத்த பறவையை நாங்கள் பார்த்துக் கொண்டிருக்க, அதை உணர்ந்தவர் போல அவர் முன்னகர்ந்து அவர் எடுத்த அந்த பறவையின் புகைப்படத்தை  சிறு குழந்தையின் மகிழ்ச்சியோடு எங்களிடம் காண்பித்தார். சில மனிதர்களைப் பார்த்த உடனேயே சினேகப்பூர்வமாக உணர்வோமே, அப்படிப்பட்டவர் கோர்டன். அன்று ஆரம்பித்த அவருடைய நட்பு ஃபோர்ட் வொர்த் நகரத்திலிருந்து வேறு நகரத்திற்கு மாறிச் சென்ற பின்பும் தொடர்ந்தது. கேமரா பற்றி, பறவைகள் பற்றி, எப்படி அந்த வயதிலும் தளராமல் தினமும் வாக்கிங் செல்லும் அவரின் உறுதி என அவரிடம் இருந்து கற்றுக் கொண்டது ஏராளம்  ஆனால் மிக முக்கியமானது அவர் முற்றிலும் அந்நியர்களை கூட மனித நேயத்தோடு பார்க்கும் விதம். அவரது கருணையும், எளிமையும், சின்ன சின்ன விஷயங்கள் கூட வாழ்க்கையை எவ்வளவு அழகாக மாற்ற முடியும் என்பதற்கான சான்றுகள்.  நான் யோசித்ததுண்டு –  கோர்டனின் இடத்தில் நாம் இருந்தால் அந்த வயதில் அவரைப் போல முன்பின் தெரியாத யாரோ ஒருவரிடம் கேமராவை காண்பித்து பேசிக் கொண்டிருக்கவோ, நட்பு பாரட்டவோ முடியுமா என்று. அசாதரணமான மனித நேயமன்றி அது சாத்தியமேயில்லை. 

வாழ்க்கைப் பயணத்தில் நாம் ஓடிக்கொண்டே இருப்பதால், பெரும்பாலான நேரங்களில் நாம் நம்மை சுற்றி நடக்கும் விஷயங்களை பொருட்படுத்துவதே இல்லை. அற்ப விஷயங்கள் என்று நாம் நினைக்கும் சில, அடுத்தவர்கள் வாழ்க்கையில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தலாம்.  ஹோட்டலில் ஆர்டர் எடுப்பவரோ, கடைகளில் பில் போடுபவரோ, ஸ்கூல் கிராஸிங் கார்டோ, இப்படி முன் பின் தெரியாத எத்தனையோ மனிதர்களை நாம் தினசரி வாழ்க்கையில் சந்திக்கிறோம். கடைசியாக நீங்கள் ஒரு முற்றிலும் அந்நிய மனிதரிடம் கருணையோடோ, அன்போடோ  எப்போது நடந்து கொண்டீர்கள் என்று நினைத்துப் பார்த்திருக்கீர்களா? 

நம்மைப் போல் இலர்

“Work from home” சொகுசு மெல்ல மறைந்து, மீண்டும் அலுவலகம் செல்வது இயல்பாகிக் கொண்டிருப்பதால், தினமும் குறைந்தது ஒரு மணி நேரமாவது பயணத்தில் கழிக்க வேண்டிய கட்டாயம். பயண நேரத்தில் பாட்காஸ்ட் கேட்பது பழக்கம். பெரும்பாலும் எகனாமிக்ஸ் அல்லது வரலாறு, சில நேரங்களில் நாட்டு நடப்புகள்.  சமீபத்தில் ஜெமோ தளத்தில் அவரின் unified wisdom பேச்சுக்கள் Spotifyயிலும் வெளியிடுகிறார்கள் என்பதைக் கண்டு ஆச்சரியப்பட்டேன். பரவாயில்லையே, இனி பயண நேரத்தில் ஜெமோவைக் கேட்போம் என்று சில நாட்களாக அவரின் பேச்சுக்களை தொடர்ந்து கேட்டு வருகிறேன். 

இன்று அவர் பேசிய தலைப்பு ‘இன்றைய தலைமுறையின் பொறுப்பின்மை’. https://open.spotify.com/episode/6hZm1v6Tltjo8rRitOHKfw?si=fk3fWyB6SK6XOR__e5YgFQ. அடுத்த தலைமுறை எப்படி செயல்படுகிறது என்பதை நேரில் பார்த்த அனுபவமுள்ள யாரும் இதை எளிதாக ஒப்புக் கொள்வார்கள். ஆனால் என்னை மிகவும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது வேறு ஒன்று. 

unified wisdom நடத்தும் பயிற்சி வகுப்புகளுக்கு வர சிலர் கேட்ட luxuries. அடப் பாவிகளா, இப்படி எல்லாம் கூட இருக்கிறார்களா என நிஜமாகவே திகைப்பை ஏற்படுத்தியது!  இத்தனை பொன்னான வாய்ப்புகள் வாசலில் வந்து கதவைத் தட்டும் போது கூட அதன் அருமை தெரியாது இருக்கிறார்கள் என்பது பெரும் ஏமாற்றமே. 

அதிலும் ஓரிருவர் பெங்களூர்/டெல்லி போன்ற பெரிய நகரங்களில் இருந்து நிகழ்ச்சியில் கலந்து கொள்ள, கவனியுங்கள், கலந்து கொள்ள, கற்றுக் கொடுக்க அல்ல, வருவதற்கு அமைப்பாளர்களிடமே பயணப்படி கேட்டார்கள் என்று அவர் சொன்ன போது இந்தப் பதர்கள் எத்தனை மண்டைக்கனம் உள்ளவர்களாக இருக்க வேண்டும் என்றே தோன்றியது. கார்ப்பொரேட் ட்ரெயினிங் என்று நினைத்துக் கொண்டிருப்பார்கள் போல. ஞானத்தை, அறிவை வழங்குகிறேன் என ஒருவர் அழைத்தால், அதற்கு பயணப்படி கேட்பேன் என ஒருவன் கூறுவானேல், அவனை மடையன் என்றல்லாமல் வேறென்ன சொல்வது?!

ஜெமோவை படிப்பவர்கள், பின் தொடர்பவர்கள் எப்படி இருப்பார்கள் என மனதில் ஒரு பிம்பம் இருந்தது – பண்பட்டவர்கள், செயல்திறம் கொண்டவர்கள், நல்ல ரசனையுள்ளவர்கள் என. நானறிந்த விஷ்ணுபுரம் நண்பர்கள் அனைவருமே அப்படிப்பட்டவர்கள் தான். ‘Classy’ என்று சொல்லத்தக்கவர்கள். ஆனால், இன்றைய பாட்காஸ்ட் கேட்டபின் மேற்கூறிய எந்த குணாதிசயங்களும் இல்லாதவர்களும் ஜெமோவை பின் தொடர்கிறார்கள் என்பது ஆச்சரியமாக இருக்கிறது. இவர்களுக்கு உள்மனம் உறுத்தாதா? பெங்களூரிலிருந்து ஈரோடுக்கு டாக்‌ஸியில்தான் வருவேன், 20000 பயணப்படி கொடுக்க முடியுமா என்று கேட்டவனை எந்த categoryயில் சேர்ப்பது என்று யோசித்துக் கொண்டிருக்கிறேன்!

பட்டாம்பூச்சி விளைவு

சரியாக பத்து நாட்கள் ஆகிறது – ஜெயமோகன் தளத்தில் ‘டாலஸ் சந்திப்பு’ தலைப்பில் நண்பர் ப்ரதீப் அவர்களின் பதிவைப் படித்து. 

ஜெமோ தன் தளத்தில் கடிதங்களை வெளியிடும்போது, பெரும்பாலும்   புகைப்படங்களுடன் சேர்த்து  வெளியிடுவதைக் கண்டு முன்பெல்லாம் நான் நினைத்ததுண்டு, எதற்காக புகைப்படங்களையும் சேர்த்து வெளியிடுகிறார் என. ஆனால் அந்த பதிவில் அவர் ‘டாலஸ் சந்திப்பு’ புகைப்படத்தை இணைத்திருக்காவிட்டால் கீழ் வரும் எதுவுமே நடந்திருக்காமல் போயிருக்கலாம். 

அந்த புகைப்படத்தை பார்த்த உடனே அதில் இருந்த செந்தில் அவர்களை அடையாளம் கண்டு கொண்டேன். செந்தில் நான் வசிக்கும் அதே பகுதியில் வசிப்பவர் மற்றும் இருமுறை அப்பகுதி தமிழர்கள் கூடிச் சந்தித்த போது அறிமுகம். பழகுவதற்கு எளிமையானவர், இனிமையானவர் என்பதோடு எங்கள் பக்கத்து மாவட்டத்துக்காரர் என்பதால் மனதில் பதிந்திருந்தார். அந்த புகைப்படத்தில் அவரைப் பார்த்த போது ஆச்சர்யமாக இருந்தது. அவர் தனக்கு இலக்கிய ஆர்வம் உண்டு என்றோ, தான் யூடூபில் திருக்குறள் சேனல் நடத்திவருவது குறித்தோ அந்த இரு சந்திப்புகளிலும் காட்டிக் கொள்ளவில்லை (அல்லது நான் கவனித்திருந்திருக்கவில்லை). அடுத்த முறை அவரைச் சந்திக்கும் போது டாலஸ் விஷ்ணுபுரம் வாசகர் வட்டம் பற்றி கேட்டு தெரிந்துக் கொள்ள வேண்டும் என்று நினைத்துக் கொண்டேன்.  The universe listens என்பது போல, அடுத்த நாளே, அவர் எங்கள் பகுதி வாட்ஸாப் தமிழ்க் குழுவில், விஷ்ணுபுரம் இலக்கியவட்டம் சார்பாக நடக்க இருக்கும் கம்ப ராமாயணக் கச்சேரி குறித்த அறிவிப்பை அவர் வெளியிட, அவர் நம்பரைக் குறித்துக் கொண்டு அவருக்கு ஒரு மெசஜ் தட்டலாம் என டைப் செய்துக் கொண்டிருக்கும் போதே, ஏதோ வேலை வர, அவசரத்தில் தவறுதலாக, அறைகுறை மெசஜ் அவருக்கு  போய்விட, அதை உடனடியாக டெலிட் செய்து விட்டு வேலையில் மூழ்கி விட்டேன். 

சாயங்காலமாக அவரிடமிருந்து ஒரு குறுந்செய்தி ‘தொடர்பு கொள்ள முயற்சி செய்தீர்களா’ என. உடனே அவரை போனில் அழைத்து ‘நீங்க திருநெல்வேலி செந்தில் தானே, நான் கணேஷ், நாகர்கோவில், இதற்கு முன்பு இருமுறை சந்தித்திருக்கிறோம்’ என அறிமுகப்படுத்திக் கொள்ள, அவர் ‘உங்கள் குரலை வைத்து அடையாளம் தெரிகிறது’ என்க, மலையாள வாசம் வீசும் நம் தமிழைத்தான் அப்படி நளினமாக சொல்கிறார் என நினைத்து லேசாக மனதில் சிரித்துக் கொண்டே, அவரிடம் நான் ஜெயமோகன் தளத்தை வாசிப்பதைக் குறித்தும், அதில் அவரின் புகைப்படத்தைப் பார்த்ததையும் சொன்னேன். அவருக்கும் ஆச்சர்யம். அவர் டாலஸ் விஷ்ணுபுரம் வாசகர் வட்டம் இரு வாரங்களுக்கு ஓரு முறை நூலகங்களில் சந்தித்து உரையாடுவதைப் பற்றி கூறி, வரும் ஞாயிறன்றும் ஃப்ரிஸ்கோ நூலகத்தில் கூட இருப்பதாகவும், முடிந்தால் வாருங்களேன் என அழைக்க, இலக்கியச் சந்திப்புகளில் பங்குபெறும் அளவிற்கு நமக்கு வாசிப்பு தகுதி இருக்கிறதா என்று உள்ளுக்கள்ளே ஒரு கேள்வி எழ, ஆனாலும் ஒருமுறை சென்று பார்க்கலாமே என்று அவரிடம் வருகிறேன் என்று சொல்லிவிட்டேன். அவர் வாட்சப் குரூப்பில் என்னை சேர்த்துவிடவும், சிறிது நேரத்தில் பிரதீப் அவர்கள் அழைத்து பேசினார்.

பிரதீப் அவர்களிடம் பேசும் போது நான் 2022ல் ஜெமோ டாலஸ் வந்திருந்த போது அந்நிகழ்ச்சிக்கு வந்திருந்ததைப் பற்றி கூற, அவர், ‘அப்படியா, அந்நிகழ்ச்சியில் எடுத்த புகைப்படம் இருந்தால் அனுப்புங்களேன், என்னால் அடையாளம் கண்டு கொள்ள முடிகிறதா எனப் பார்க்கிறேன்’ எனக் கூறி, வரும் ஞாயிறன்று நடைபெற இருக்கும் இலக்கியச் சந்திப்பு பற்றியும், டாலஸ் விஷ்ணுபுரம் வாசகர் வட்டம் பற்றியும் சுருக்கமாக விளக்கினார். நான் நமக்கு வாசிப்பு தகுதி இருக்கிறதா என எனக்குள் இருக்கும் தயக்கத்தை வெளிப்படுத்த, ‘பரவாயில்லை, வாருங்கள். இது நட்பார்ந்த கலந்துரையாடல்’ என்று ஊக்கப்படுத்தினார். சிறிது நேரத்திலேயே ஞாயிறன்று கலந்துரையாடுவதற்கான நான்கு கதைகளின் சுட்டியையும் கொடுத்து உதவினார். 

அந்த இலக்கியச் சந்திப்பிற்குப் பின் அவர்களிடமிருந்த ஏதோ ஒரு பொறி, என்னுள் அணைந்திருந்த கங்குகளை பற்ற வைத்ததைப் போல், மீண்டும் மீண்டும் அந்த கலந்துரையாடல் மனதுக்குள்ளே ஓடிக் கொண்டிருக்கவே, அதைப் பற்றிய நினைவுக்குறிப்புகளை பதிவு செய்யலாம் என்று தமிழில் தட்டச்சு செய்யலாம் என்று ஆரம்பித்து – கவனிக்க, நான் முன் பின்னே  தமிழில் தட்டச்சு செய்து பழக்கமில்லாதவன் – அது அப்படியே ஓரு வலைத்தளத்தை ஆரம்பிக்க வைத்தது. இப்போது திரும்பிப் பார்க்கும் போது, இந்த பத்து நாட்களில் கிட்டத்தட்ட 4000 வார்த்தைகள் தமிழில் டைப் செய்துள்ளேன். தினமும் மீண்டும் தமிழில் படிக்க , ஆழ்ந்து படிக்க ஆரம்பித்துள்ளேன். 

உலகில் எங்கோ ஓரு மூலையில் ஒரு பட்டாம்பூச்சி சிறகடிப்பதற்கும், வேறொரு மூலையில் சுனாமி வருவதற்கும் சம்பந்தம் இருக்கலாம் என்பது போல, எங்கோ இருந்து ஜெமோ வெளியிட்ட ஒரு பதிவு என்னுள் ஏற்படுத்திய மாற்றங்களை நினைத்துப் பார்க்கிறேன். 

நுலக அனுபவம்

பள்ளிப் பருவத்தில், நான் படித்த அரசுப்பள்ளியில் நூலகம் என்ற ஒன்று இருக்கவில்லை. எங்களூரில் ஒரு வாசிப்பு சாலை இருந்தது. நாளிதழ்கள், வார இதழ்களுக்கு மேலே புத்தகங்கள் என்று பெரிதாக சொல்லிக்கொள்ளும்படியாக அங்கு எதுவும் இருந்ததாக நினைவில்லை.

பதின்வயதில் நானாக பஸ் ஏறி நாகர்கோவில் செல்ல ஆரம்பித்த பின் செய்த முதல் காரியம், நாகர்கோவில் மைய நூலகத்தில் உறுப்பினர் அட்டை வாங்கியது. அப்போது மைய நூலகம் ஒழுகினசேரி டென்னிஸ் கிளப் அருகே ஒரு பழைய இரண்டு அடுக்கு கட்டிடத்தில் இருந்தது. கீழ்தளத்தில் நாளிதழ்களும், மேகஸின்களும், மேல் தளத்தில் புத்தகங்களும். எப்போதும் கீழ்தளத்தில் தூங்கி வழிந்தும், சோர்ந்த கண்களுடனும் சிலர் இருப்பார்கள். பெரும்பாலும் மத்திய வயதை கடந்தவர்கள் அல்லது வயசாளிகள். unwelcoming ambience என்பதை அந்த ஹாலின் எல்லா பக்கமும் உணரலாம். அதைத்தாண்டி மேல்தளம் சென்றால், அங்கே ஒரு அம்மணி (லைப்ரரியன்) உக்கிரமான பெண்தெய்வங்களை நினைவுறுத்துவது போல, எதற்காக வந்தாய் என்பது போல அமர்ந்திருப்பார். அவரைத்தாண்டிச் சென்றால் ஆறு புத்தக ரேக்குகள். ஒருவர் மட்டுமே சென்று வர இடைவெளி இருக்கும். கிட்டதட்ட அரை இருட்டில், காற்றே வராத அந்த இடத்தில் புத்தகங்களை தேடி எடுத்து வரும்போது வியர்வையில் நனைந்து பரிதாபமான ஒரு நிலையில் இருப்பேன். இப்போது யோசித்துப்பார்க்கும் போது அந்த அம்மணி எப்போதும் கோப நிலையில் இருந்ததின் காரணம் புரிகிறது. ஒருவர் தினமும் எட்டு மணி நேரம் அந்த இடத்தில் இருந்து வேலை செய்வது என்பது கிட்டதட்ட தன்டணையே தான்.

வேலை நிமித்தம் அமெரிக்கா வந்த பின், இதுவரை ஐந்து வெவ்வேறு மாகாணங்களில், வெவ்வேறு ஊர்களில் வசித்திருக்கிறேன். அந்த ஊர்களின் நூலகங்களை நன்றாக உபயோகித்திருக்கிறேன். எந்த ஓரு நூலகத்திலும் unwelcoming ஆக உணர்ந்ததேயில்லை. மாறாக, எல்லா நூலகங்களுமே வாசகர்கள் வர வேண்டும், குடும்பமாக வர வேண்டும், குழந்தைகளோடு வர வேண்டும் என்ற ரீதியிலேயே செயல்படுகிறார்கள். குழந்தைகளுக்கான தனி section இல்லாத எந்த நூலகத்தையும் இங்கு பார்த்ததேயில்லை. குழந்தைகளை சிறு வயதிலேயே புத்தகங்களுக்கும் நூலகங்களுக்கும் அறிமுகப்படுத்துவதால் அந்த குழந்தைகளும் நல்ல manners and maturity யோடு வளர்கிறார்கள்.

சமீபத்தில் ஃப்ரிஸ்கோ நூலகத்திற்கு செல்லும் வாய்ப்பு கிடைத்தது. புதியதாக கட்டப்பட்ட இந்த நூலகம் architecture மற்றும் kid-centric approachக்காக தேசிய அளவில் பேசப்பட்டது.

Rexy, a giant 21 foot tall T-rex replica remains on the floor of Frisco Public Library on Tuesday, March 14, 2023, in Frisco.

என்னைப்போன்ற பின்புலத்திலிருந்து வரும் ஒருவனுக்கு இந்த நூலகம் அளிக்கும் ஆச்சர்யம் வார்த்தைகளால் விவரிக்கமுடியாதது. நான் சென்றது ஒரு ஞாயிறு காலை. அப்போது கூட எத்தனை எத்தனை குழந்தைகள், குடும்பங்கள் நூலகம் நோக்கி வருவதை காணும் போது மனதில் ஒரு இனம்புரியா மகிழ்ச்சி, கூடவே ஒரு ஏக்கம் என்றாவது நம்மூரிலும் இதைப்போல் குழந்தைகளும் உபயோகிக்கும் வண்ணம் நூலகங்கள் வராதா என்று.

கைகாரி தோசை!

அ.முத்துலிங்கம் அவர்களின் ‘ஒரு சாதம்’ கதையை படித்திருக்கிறீர்களா? எனக்கு மிகவும் பிடித்த சிறுகதைகளில் ஒன்று. படிக்க எளிமையான ஆனால் மிக சுவாரஸ்யமான கதை. அ.முத்துலிங்கம் அவர்கள் ஒரு master story teller என்பதற்கு எவ்வளவோ உதாரணங்களை சொல்லலாம், ஆனால் எனக்கு மிகவும் பிடித்த கதைகளுள் இது ஒன்று. ஒரு சிறுகதைக்குள்ளே எத்தனை தகவல்கள், உட்கதைகள். கதைக்குள்ளே அவ்வையார் வருகிறார், காந்தி வருகிறார், ராமாயணம் வருகிறது, benzene அணு அடுக்கு முறை வருகிறது, முருகனின் சூரசம்ஹாரம் வருகிறது, chaos theory வருகிறது, கம்பியுட்டர் ப்ரோக்கிரம் வருகிறது. கொஞ்சமும் தொய்வில்லாத நடையில் எழுதபட்ட, எத்தனை முறை படித்தாலும் சலிக்காத கதை. இந்த கதை கிட்டதட்ட 30 வருடங்களுக்கு முன்பே எழுதப்பட்டது என்பது ஆச்சர்யமே.

சமீபத்தில் டாலஸ் நகர விஷ்ணுபுரம் இலக்கிய வட்ட வாசகர் சந்திப்பு கலந்துரையாடலுக்காக தேர்ந்தெடுக்கப்பட்ட நான்கு சிறுகதைகளில் இதுவும் ஒன்று. நீண்ட நாட்களுக்கு பிறகு தமிழில், அதுவும் அ.முத்துலிங்கம் அவர்களின் கதையைப் படிக்க பரிந்துரைத்த வாசகர் வட்ட நண்பர்களுக்கு நன்றி.

கதையின் தொடக்க பத்தியிலேயே, ‘வீட்டினுள்ளே சிவலிங்கம் ஒரு சாரமும், பனியனுமாக நின்றான்’, அதுவும் குளிர்காலத்தில் என்று படிக்கும்போதே, ‘ஆகா, நம் இனமடா’ என்று தோன்றியதை தவிர்க்க முடியவில்லை. தமிழ்நாட்டில் குமரி, நெல்லை மாவட்டக்காரர்களைத்தவிர, மற்றவர்கள் சாரம் என்பதை லுங்கி என்றே அறிந்திருப்பார்கள்.

கதையின் துவக்கத்திலேயே கதை மாந்தர்களின் பின்புலம் மற்றும் அவர்களின் குணங்களை நுணுக்கமாக காட்டிவிட்டு கதை ஜெட் வேகத்தில் செல்கிறது. சிவலிங்கம் தன் ஆரம்ப கால கனடா அனுபவங்களை பகிரும்போது பரமனாதன் இடத்தில் நாமே இருந்து கேட்பது போலவே இருந்தது.

Choas theoryஐ அவ்வையாரின் ‘வரப்புயற’ பாட்டை கொண்டு விளக்கியிருப்பது அருமை. அதே போல, ‘ஜானகியைக் கவர்ந்த காதல் எங்கே ஒளிந்த்திருக்கிறது என்று ராவணுனுடைய உடலை கூரிய அம்பினால் ஒட்டை போட்டு, ஒட்டை போட்டு தடவிப் பார்த்ததாம் ராமனுடைய பாணம். அதுபோலத்தான் எங்கேயோ ஒளிந்திருக்கும் அந்த பிழையைத் துருவித் துருவி தேடிப் பார்க்கிறேன்.’ என்ற வரிகளைப் படிக்கும் போது, எப்படி இவரால் இப்படியெல்லாம் சிந்திக்க முடிகிறது என்ற ஆச்சரியம் எழாமல் இல்லை.

கதையின் முடிவில், ‘oru sadham’ என்பது ஒரு சாதம் அல்ல, ஒரு சதம் என்பது தெளிவாகும் தருணத்தில்,பரமனாதனோடு சேர்ந்து நமக்கும் வரும் புன்னகை, கதையின் வெற்றி.

இந்தக் கதையை வாசிக்கும்போது எனக்கு ஒரு பழைய ஞாபகம் வந்தது. சுமார் பதினைந்து வடங்களுக்கு முன்பு நாங்கள் சிக்காகோவில் இருந்த போது, பக்கத்து ஊரில் ஒரு புதிய இந்தியன் ரெஸ்டாரண்ட் திறந்தார்கள். நண்பர்கள் அந்த புதிய இடத்தில் சாப்பிட்டுவிட்டு மிக நன்றாக இருக்கிறது என்று கூறவே, நானும் மனைவியும் ஒரு மாலை அங்கு சென்றோம். மெனு கார்டில் நிறய புதுப்புது ஐட்டங்கள். தோசை வரிசையில், புதிதாக கைகாரி தோசை என ஓன்று இருந்தது. வட இந்தியர்களால் நடத்தப்படும் ரெஸ்டாரென்ட் என்பதால் ‘Bikaniri’ போல கைகாரி ஏதோ ஊர் பெயராக இருக்கும் என்றெண்ணி மனைவி அதை ஆர்டர் செய்தார். சர்வரும் கைகாரி தோசை என்றே ஒப்பித்துவிட்டு சென்றார். சில நிமிடங்களில் தோசையும் வந்தது. நல்ல திட்டமான தோசை மேல் கேரட், பீட்ரூட், கொத்தமல்லி, கீரை எல்லாம் போட்டு.

அப்போது தான் எங்களுக்கு புரிந்தது, vegetable dosa எனபதைத்தான் அவர்கள் ‘kaikari dosa’ என்று போட்டிருக்கிறார்கள் என்று அதாவது காய்கறி தோசை!

‘oru sadham’,ஒரு சாதம் ஆனதைப்போல, ‘kaikari dosa’ஐ கைகாரி தோசை என்று படித்த எங்களை நினைத்து சிரித்துக்கொண்டேன்!

இலக்கியச் சந்திப்பு

இலக்கியச் சந்திப்புகளில் பங்குபெறும் அளவிற்கு நமக்கு வாசிப்பு தகுதி இருக்கிறதா என்ற சந்தேகத்துடனேதான் ஞாயிறன்று ஃப்ரிஸ்கோ நூலகத்தில் நடந்த விஷ்ணுபுரம் இலக்கியவட்ட வாசகர் சந்திப்பில் கலந்து கொள்ள புறப்பட்டேன்.

சிறுவயதிலிருந்து வாசிக்கும் பழக்கம் இருந்தும், முறையான பயிற்சியோ வழிகாட்டுதலோ இல்லாததும், கடந்த சில வருடங்களாக ஜெயமோகன் வலைத்தளத்தை தவிர தமிழில் வாசிப்பது மிகவும் குறைந்து விட்டதும் எனக்கு தயக்கத்தை உருவாக்கியது. நண்பர் செந்தில் அழைத்தபோது, “ஒருமுறை சென்று பார்த்துவிடலாமே” என்ற எண்ணத்துடன் அவரிடம் வருகிறேன் என சொன்னேன். அவர் என்னை வாட்ஸ்அப் குழுவில் சேர்த்ததும், பிரதீப் அவர்கள் அழைத்து கதைகளுக்கான சுட்டிகளை பகிர்ந்ததும் எனக்கு ஒரு நம்பிக்கையை வழங்கியது.


வாசிக்க வேண்டிய நான்கு கதைகள்

தேர்ந்தெடுக்கப்பட்ட கதைகள்:

  • அசோகமித்திரனின் ‘காந்தி’ மற்றும் ‘காலமும் ஐந்து குழந்தைகளும்’
  • அ. முத்துலிங்கத்தின் ‘கடவுச்சொல்’ மற்றும் ‘ஒரு சாதம்’

சந்திப்பிற்கு நான்கு நாட்களே இருந்ததால், தினமும் இரவில் ஒரு கதை என்று முடிவெடுத்தேன்.
என் மனதிற்கு நெருக்கமானவர் முத்துலிங்கம் என்பதாலும், அவருடைய பல கதைகளை ஏற்கனவே வாசித்திருந்ததாலும் கடவுச்சொல் கதையிலிருந்து தொடங்கினேன்.

பல வருடங்களுக்குப் பிறகு தமிழில் வாசிப்பதைப் பார்த்து என் மனைவிக்கும் மகனுக்கும் ஆச்சரியம்!
அ.முத்துலிங்கத்தின் இரண்டு கதைகளும் எளிதாக வந்தது. வாசித்த பின் அவருக்கு ஒரு கடிதம் எழுதும் பழைய பழக்கத்தையும் மீட்டெடுத்தேன்.

அசோகமித்திரனின் கதைகளை வாசிக்கும் போதே “புரிகிற மாதிரி, புரியாத மாதிரி” என்ற மனநிலை. “சந்திப்பில் கேட்டு விளக்கமெடுத்துக்கொள்வோம்” என்று விட்டுவிட்டேன்.


ஞாயிறு காலை 9 மணிக்கு நிகழ்ச்சி. 8:55-க்கு ஃப்ரிஸ்கோ நூலகத்தை வந்தடைந்தேன். ஏற்கனவே வாசகர் நண்பர்கள் அங்கே வந்திருந்தனர். நூலகம் திறந்ததும் நாங்கள் எட்டு பேர் ஒரு குழுவாக உள்ளே சென்றோம். வெங்கட் பின்னர் இணைந்து கொண்டார்.
அன்னபூரணா அவர்கள் விநாயகரை பாடி நிகழ்ச்சியை தொடங்கினார்கள்.


கதைகள் மற்றும் கலந்துரையாடல்கள்

‘காந்தி’ பற்றி முதலில் விவாதம் நடைபெற்றது. பாலாஜி அவர்கள், அசோகமித்திரனின் எழுத்து “writer’s writer” எனக் குறிப்பிட்டு, பல அடுக்குகள் கொண்ட எழுத்துமுறையை விளக்கினார். மூர்த்தி மற்றும் பிரதீப், காந்தியின் பல பரிணாமங்களைப் பற்றியும், அவர் இன்றும் பேசப்படும் ஒருவராக இருக்கின்ற நிலைப்பாட்டையும் விவாதித்தனர். செந்தில், கசப்பும் கனிவும் கதையின் உள் நயமாக இருப்பதை வெளிப்படுத்தினார். நான் தவறாக புரிந்திருந்த ஒரு வரியை, மூர்த்தி தெளிவாக்கினார். பாலாஜி, ஜெமோவின் ‘இன்றைய காந்தி’ கட்டுரையை வாசிக்க வேண்டும் என்று பரிந்துரை செய்தார்.

‘காலமும் ஐந்து குழந்தைகளும்’ எனக்கு சற்று பிடிபடாமல் இருந்த கதை. ஆனால் செந்தில், ஐந்து குழந்தைகளை ஐம்புலன்கள், அல்லது பஞ்சபூதங்களாகலாம் என ஒரு புதிய பார்வையை வழங்கினார். மூர்த்தி, நடுத்தர வர்க்க மனநிலையை கதையின் வழியே விவரித்தார். பிரதீப், கதையின் ஒரு காட்சியை தேவதையின் தேடல் என ஓவியப்படுத்தினார்.

‘ஒரு சாதம்’ கதையை, ராதா அவர்கள் நினைவில் இருந்து ழுமையாகச் சொன்னது பிரமிப்பாக இருந்தது.ஒரு சதம் என்பது சிவலிங்கம் கடுமையான உழைப்பு, நேர்மை, புத்திக்கூர்மையால் முன்னுக்கு வரும் ஒரு சதம் பேரில் ஒருவன் என்ற perspective நான் முற்றிலும் எதிர்பாராதது. 

கடைசியாக, ‘கடவுச்சொல்’ . ஏன் கடவுச்சொல் என்ற தலைப்பு என்பதில் ஆரம்பித்து, எப்படி அது ஆப்ரஹாமின் பாவமன்னிப்பாக எடுத்துக்கொள்ளலாம் என்று சென்றது. வெங்கட் இந்தக் கதை உணர்வுப்பூர்வமாக தன் பாட்டியை நினைவூட்டியதை பகிர்ந்து கொண்டார்.


என்ன கற்றுக்கொண்டேன்?

இந்த சந்திப்பில் கலந்துகொண்டிருக்காவிட்டால், இத்தனை புதிய perspectives தெரிந்துக்கொள்ளாமலேயே போயிருப்பேன்! உண்மையில் இவர்கள் பேச்சைக் கேட்கும்போது எனக்குள்ளே ஆச்சர்யமும், பிரமிப்புமே மேலிட்டது. அபாரமான ஞாபக சக்தியும், செறிவான மற்றும் தொடர்ச்சியான வாசிப்பனுபவமும் கொண்ட நண்பர்கள் சூழ இரண்டு மணிநேரம் செலவிட்டது ஒரு புதிய அனுபவம்.

இவர்களிடமிருந்து கற்றுக் கொண்ட இன்னொரு விஷயம் அவர்கள் ஒரு சிறுகதையை கிட்டதட்ட மாடர்ன் ஆர்ட் போல பார்க்கும் விதம். மாடர்ன் ஆர்ட்டில் எப்படி ஒவ்வொரு தூரிகை தீற்றலுக்கும், வண்ணங்களுக்கும் உள் அர்த்தம் இருக்ககூடுமோ அதைப் போல கதைக்குள்ளும் இருக்கும், இருக்க வேண்டும் என்று ஆழ்ந்து பார்க்கின்றனர். அறிமுகமோ பயிற்சியோ இன்றி மாடர்ன் ஆர்ட்டை ரசிக்க முடியாது அதைப்போல அவர்கள் அனைவருக்கும் வாசிப்பில் பயிற்சி இருந்ததாகவே எனக்குப்பட்டது. என் வாசிப்பு முறை ரவிவர்மா ஓவியத்தை ரசிப்பது போல. சகுந்தலா, துஷ்யந்தன் வருகிறானா என்று திரும்பி பார்க்கிறாள் என்ற அளவில் ரவிவர்மா ஓவியத்தை பார்க்க, ரசிக்க, அனுபவிக்கத் தெரியும். ஆனால், இந்த நண்பர்கள் ஒரு படி மேலே போய் காளிதாசனின் சாகுந்தலத்தில் இருந்து மேற்கோள் காட்டும் அளவுக்கு ஆழ்ந்த வாசிப்பு அனுபவம் கொண்டவர்கள் என்று தோன்றியது.


நன்றிகள்

  • செந்திலுக்கு, இந்த வாசகர் வட்டத்தை எனக்கு அறிமுகப்படுத்தியதற்கும்
  • பிரதீப்பிற்கு, கதைகள் அனுப்பி, கலந்துரையாடலுக்கு வழிவகுத்ததற்கும்
  • மற்றும்
  • இவை அனைத்துக்கும் மையப்புள்ளியாக இருக்கும் ஜெயமோகன் அவர்களுக்கு.