அன்பே சிவம்

சமீபத்தில் ஒரு அவசர வேலையாக, கடை மூடப்போகும் கடைசி நேரத்தில் காஸ்ட்கோவிற்கு செல்ல வேண்டியிருந்தது.அவசரமாக வேண்டிய பொருளை எடுத்துக் கொண்டு, செக்-அவுட் கவுண்டரில் வரிசையில் நின்றேன். என் முன்னால் நின்றிருந்த ஒருவரின் கார்ட்(cart) முழுக்க நிரம்பியிருந்தது. கவுண்டரில் இருந்தவர் வயதான கேஷியர்; நாள் முழுவதும் நின்று கொண்டே வேலை செய்து சோர்வடைந்திருந்தார். மேலும், அவரின் ஷிப்ட்  முடியும் நேரம் என்பதால் முகத்தில் அந்த சோர்வு தெளிவாகத் தெரிந்தது. ஆனால் வரிசையில் நின்றிருந்த அந்த நபருக்கு, கொஞ்சமாவதுஉதவலாமே, சிலபொருளையாவதுஎடுத்து வைக்கலாமே என்ற சிந்தனை கூட வரவில்லை. எல்லாவற்றையும் அந்த வயதான கேஷியர் தனியாகச் செய்யட்டும் என்கிற மாதிரி அப்படியே சும்மா பார்த்துக்கொண்டே நின்று கொண்டிருந்தார்.

அந்தக் காட்சியைப் பார்த்தவுடனே என் மனதில் பல கேள்விகள் எழுந்தன. ஒரு சிறிய உதவியைக் கூட செய்ய விருப்பமில்லாத இந்த மனிதர், வீட்டில் எப்படிப்பட்டவராக இருப்பார்? தன் மனைவி, பிள்ளைகள், குடும்பத்தாரிடம் எவ்வளவு சுமையை போட்டிருப்பார்? இப்படிப் பொது இடத்தில் கூட சுயநலம் காட்டுகிறவர், தனிப்பட்ட வாழ்க்கையில் எவ்வளவு கருணையற்றவராக இருக்கக் கூடும்?

சில நேரங்களில் இப்படிப்பட்ட சாதாரணமான தருணங்களில்தான் ஒருவரின் உண்மையான மனிதநேயம் அல்லது சுயநலம் தெளிவாக வெளிப்படுகிறது. நல்லவேளையாக என் சொந்த அனுபவத்தில் பெரும்பாலும் கருணையாளர்களையே சந்தித்து இருக்கிறேன்.

நான் முதல் முறை அமெரிக்கா வந்தபோது மில்வாக்கி என்ற ஊரில் நடந்த சம்பவம். வந்த இரண்டாவது நாளில், போன் சார்ஜர் பழுதாகிப் போகவே, வேறு சார்ஜர் வாங்க பக்கத்தில் இருந்த ரேடியோஷாக் கடைக்கு அறை நண்பனுடன் சென்றிருந்தேன். அப்போதெல்லாம் எலக்ட்ரானிக்ஸ் பொருட்கள் வாங்க, ரேடியோஷாக் மிகப் பிரபலம்.   கடைக்கு வெளியே, ஒரு முதிய வெள்ளையர் ஏதோ உபகரணங்களை மாட்டிக் கொண்டிருந்தார். நாங்கள் கடையில் இருந்து வெளியே வந்த போது தான் தெரிந்தது அது டெலஸ்கோப் என்று. ஆர்வமுடன் நாங்கள் பார்ப்பதை கவனித்த அவர், ‘நிலவைப் பக்கத்தில் பார்த்திருக்கிறீர்களா? வந்து பாருங்கள்’ என்றழைக்கவே, முதல் முறையாக டெலஸ்கோப் மூலமாக நிலவைப் பார்த்து வாயடைத்துப் போனேன். நிலவின் மலைப் பரப்புகள், க்ரேட்டர்ஸ் என இதுவரை கண்டிராத நிலவை அன்று பெயர் கூடத் தெரியாத அந்த அமெரிக்கர் காட்டினார். இப்போது யோசித்துப் பார்க்கும் போது, முற்றிலும் அந்நியர்களாகிய எங்களை அன்று அவருடைய விலை உயர்ந்த டெலஸ்கோப்பை பயன்படுத்து அழைத்தது அவரின் பெருந்தன்மையும், சக மனிதர்களின் மேல் அவருக்கிருந்த நம்பிக்கையும் அல்லவா. இந்த சம்பவம் நடந்து கிட்டத்தட்ட பதினாறு வருடங்கள் ஓடி விட்டன. இன்னும் கூட அந்த பெயர் தெரியாத அந்த முதிய அமெரிக்கரின் முகமும் அந்த சம்பவமும் நினைவில் இருக்கிறது. (அதன் பின்னே டெலஸ்கோப் பித்துப் பிடித்து, இந்தியா திரும்பும் போது நானும் ஒரு டெலஸ்கோப் வாங்கிக் கொண்டு போனது தனிக்கதை.) 

திருமணமான சில மாதங்களில் நாங்கள் சிகாகோவில் இருந்தோம். அப்போது குறுகிய கால ப்ராஜக்ட் என்பதால், எப்போது வேண்டுமானலும் திருப்பி அனுப்பப்படலாம் என்றிருந்ததால், முடிந்தவரை அமெரிக்காவை சுற்றிப் பார்க்கலாம் என்று அக்டோபர் மாதத்தில் நயாகரா நீர் வீழ்ச்சியைக் காணச் சென்றிருந்தோம். அது ஆஃப் சீசன் என்றோ, அந்த நேரத்தில்  நயாகராவில் கிட்டத்தட்ட எல்லாமே மூடப்பட்டிருக்கும் என்றோ எங்களுக்கு தெரிந்திருக்கவில்லை. மதிய உணவிற்காக, கூகுளில் தேடிப் பார்த்த போது, பக்கத்திலேயே ஒரு பஞ்சாபி ஹோட்டலைக் காண்பிக்க, நாங்களும் உள்ளே சென்று விட்டோம். உள்ளே நுழைந்த பின்தான் தெரிந்தது, ஆஃப் சீசன் என்பதால் அந்த ஹோட்டல் அப்போது தற்காலிகமாக மூடப்பட்டிருந்தது. ஆனாலும் மதிய உணவு நேரத்தில் சென்றதால், அந்த ஹோட்டலின் ஒரு பகுதியிலேயே குடியிருந்த அந்த ஹோட்டலின் உரிமையாளர் குடும்பத்தினர் அவர்களுக்காக சமைத்திருந்த உணவை எங்களுடன் பகிர்ந்து கொண்டது மறக்க முடியாததது. அதன் பின்பு பஞ்சாபிகள் மீதான என் மதிப்பு பல மடங்கு கூடிப் போனது. “பகிர்ந்து உண்டு உண்” என்பதற்கு ஈடான பதம் பஞ்சாபியில் இருக்கிறதா என்று தெரியவில்லை, ஆனால் அன்று அவர்கள் செய்தது அதைத்தானே! முன்பின் தெரியாதவர்களிடம் தங்கள் உணவைப் பகிர்ந்து கொள்ள அவர்கள் எத்தனை கருணை உள்ளவர்களாக இருக்க வேண்டும். 

கோர்டன் ஹென்றியை நாங்கள் சந்திக்கும் போது அவருக்கு வயது 70களில் இருந்திருக்கலாம். கைத்தடியுடன் தான் வாக்கிங் வருவார். ஆனால் கைத்தடி நடப்பதற்காக அல்ல, பாம்பு போன்ற ஜந்துகளிடமிருந்து பாதுகாத்துக் கொள்ள என்று புன்னகையோடு சமாளிப்பார். அப்போது நாங்கள் ஃபோர்ட் வொர்த் நகரத்திலிருந்தோம். மாலை நேரங்களில் ட்ரினிட்டி ஆற்றோரமாக வாக்கிங்  செல்வது வழக்கம். அன்றைய காலகட்டத்தில் அங்கு வாக்கிங் செல்பவர்கள் குறைவு. அதுவும் வார நாட்களில் விரல் விட்டு எண்ணும் அளவிலேயே ஆட்கள் இருப்பார்கள். அப்படி ஒரு வார நாளில் ட்ரினிட்டி ஆற்றோரமாக வாக்கிங்  செல்லும் போது தான் கோர்டன் ஹென்றியை சந்தித்தோம். தன் கைத்தடியை மோனோபோட் போலப் பயன்படுத்தி அன்று அவர் ஒரு பறவையை புகைப்படம் எடுத்துக் கொண்டிருந்தார். போட்டோகிராஃபி மற்றும் பறவைப் பார்த்தல் இரண்டிலும் ஆர்வம் இருந்ததால் அவர் ஃபோட்டோ எடுத்த பறவையை நாங்கள் பார்த்துக் கொண்டிருக்க, அதை உணர்ந்தவர் போல அவர் முன்னகர்ந்து அவர் எடுத்த அந்த பறவையின் புகைப்படத்தை  சிறு குழந்தையின் மகிழ்ச்சியோடு எங்களிடம் காண்பித்தார். சில மனிதர்களைப் பார்த்த உடனேயே சினேகப்பூர்வமாக உணர்வோமே, அப்படிப்பட்டவர் கோர்டன். அன்று ஆரம்பித்த அவருடைய நட்பு ஃபோர்ட் வொர்த் நகரத்திலிருந்து வேறு நகரத்திற்கு மாறிச் சென்ற பின்பும் தொடர்ந்தது. கேமரா பற்றி, பறவைகள் பற்றி, எப்படி அந்த வயதிலும் தளராமல் தினமும் வாக்கிங் செல்லும் அவரின் உறுதி என அவரிடம் இருந்து கற்றுக் கொண்டது ஏராளம்  ஆனால் மிக முக்கியமானது அவர் முற்றிலும் அந்நியர்களை கூட மனித நேயத்தோடு பார்க்கும் விதம். அவரது கருணையும், எளிமையும், சின்ன சின்ன விஷயங்கள் கூட வாழ்க்கையை எவ்வளவு அழகாக மாற்ற முடியும் என்பதற்கான சான்றுகள்.  நான் யோசித்ததுண்டு –  கோர்டனின் இடத்தில் நாம் இருந்தால் அந்த வயதில் அவரைப் போல முன்பின் தெரியாத யாரோ ஒருவரிடம் கேமராவை காண்பித்து பேசிக் கொண்டிருக்கவோ, நட்பு பாரட்டவோ முடியுமா என்று. அசாதரணமான மனித நேயமன்றி அது சாத்தியமேயில்லை. 

வாழ்க்கைப் பயணத்தில் நாம் ஓடிக்கொண்டே இருப்பதால், பெரும்பாலான நேரங்களில் நாம் நம்மை சுற்றி நடக்கும் விஷயங்களை பொருட்படுத்துவதே இல்லை. அற்ப விஷயங்கள் என்று நாம் நினைக்கும் சில, அடுத்தவர்கள் வாழ்க்கையில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தலாம்.  ஹோட்டலில் ஆர்டர் எடுப்பவரோ, கடைகளில் பில் போடுபவரோ, ஸ்கூல் கிராஸிங் கார்டோ, இப்படி முன் பின் தெரியாத எத்தனையோ மனிதர்களை நாம் தினசரி வாழ்க்கையில் சந்திக்கிறோம். கடைசியாக நீங்கள் ஒரு முற்றிலும் அந்நிய மனிதரிடம் கருணையோடோ, அன்போடோ  எப்போது நடந்து கொண்டீர்கள் என்று நினைத்துப் பார்த்திருக்கீர்களா? 

மலை சார்ந்த நினைவுகள்

குழந்தைகளிடம் இயற்கை காட்சி  எதையாவது படம் வரையச் சொன்னால், பெரும்பாலான குழந்தைகள் மலை சார்ந்த ஏதோ ஒன்றைத் தான் எப்போதும் வரைவதை கவனித்திருக்கீர்களா? மலையை நேரில் பார்த்திராதா குழந்தைகளின் மனதில் கூட மலை என்ற பிம்பம் எப்படியோ பதிவாகி இருப்பது ஆச்சரியம் தான்.

நான் பிறந்து வளர்ந்த ஊரில், அப்போதெல்லாம் வீட்டு மொட்டை மாடியிலிருந்துப் பார்த்தால், மூன்று திசைகளிலும் மலையைப் பார்க்கும் பாக்கியம் இருந்தது. மேற்கே வேளிமலை, வடக்கே  தாடகை மலை, கிழக்கே மகேந்திரகிரி மலை. மலைகள் எனக்கு எப்போதுமே ஒரு விதமான ஆர்வமூட்டும் விஷயமாகவே இருந்து வருகிறது. மலைக்க வைப்பதானால் தான் மலை என்கிறோமா?!  

கீழே இருக்கும் படத்தில் நட்ட நடுவே இருக்கும் ஏரிக்கு பக்கத்தில் இருக்கும் ஊர் தான் நான் பிறந்த ஊர். ஏரியின் பெயர் தான் ஊரின் பெயரும் – புத்தேரி.

நாகர்கோவில் ரயில் நிலையத்திலிருந்தோ, பேருந்து நிலையத்திலிருந்தோ இறங்கிய உடனேயே வெளியே பார்த்தால் சுற்றிலும் மலைகளைக் காணலாம். நாகர்கோவிலிலிருந்து வடக்கு நோக்கி செல்லச் செல்ல, ஏரிகள், குளங்கள், வயல்கள், இவை அனைத்துக்கும் பிண்ணனியில் மலைகள் என மிக ரம்மியமாக இருக்கும்.

பள்ளிப் பிராயத்தில் தாடகை மலை எரிமலை போல வெடிக்கப் போகிறது என்று யாரோ புண்ணியவான்  புரளியைக் கிளப்பி விட, தாடகை மலை  நிஜமாகவே வெடிக்கப் போகிறதோ என்று நானும் அண்ணனும் அவ்வப்போது தாடகை மலையை  வீட்டு மொட்டை மாடியிலிருந்து செக் செய்துக் கொண்டதை இப்போது நினைத்துப் பார்த்தால் சிரிப்பு தான் வருகிறது! கோடை விடுமுறை நாட்களில் வேளிமலை அடிவாரத்தை ஒட்டி ஓடும் கொரமணி ஆற்றில், இழுத்துக் கொண்டு ஓடும் தண்ணீரில் எதிர் நீச்சல் போட்டுக் குளிப்பது, அங்கிருந்து கிழக்கு நோக்கிப் பார்த்தால், பச்சைப்பசேல் என கடல் போல் பரந்து கிடக்கும் வயல்களின் அழகை பார்த்து ரசிப்பது என அதெல்லாம் ஓரு தனி அனுபவம்.

வேளிமலை அடிவாரத்தில் தான் நான் படித்த கல்லூரி இருக்கிறது. கல்லூரி நாட்களில் பேருந்தில் பயணம் செய்யும் போது, ஜன்னலோரம் அமர்ந்து மலையை ரசித்துக்கொண்டே பயணிப்பது இன்றும் மனதில் இனிய நினைவாக இருக்கிறது. ஒரு முறை கல்லூரியை கட் அடித்து விட்டு, வேளிமலைக்கு மேல் இருக்கும் ஃபால்ஸுக்கு  நண்பர்களுடன் செல்லும் போது, பாதி வழியில் திடீரென மழை வந்து இருட்டி விடவே,  வந்த தடம் மறந்து போனது. அப்பொதெல்லாம் செல்போன் என்ற ஓன்று வந்திருக்கவில்லை. எப்படியோ தட்டுத்தடுமாறி கீழே இறங்கி வந்தோம். இன்று நினைத்துப் பார்க்கும் போது அதெல்லாம் அட்வெஞ்சர் தான்.

அடியிலிருந்து மலையைப் பார்க்கும் போது நமக்கு ஏற்படும் பிரமிப்புற்கு பல மடங்கு பிரமிப்பு மலையின் மேலிருந்து கீழே பார்க்கும் போது ஏற்படுவது. கல்லூரி நான்காம் வருடம் ஒரு முறை நண்பர்களுடன் கோதையாறு ஹைட்ரோ பவர் பிளான்ட் பார்க்க சென்றிருந்தோம். முள்ளும் மலரும் படத்தில் பார்த்திருப்பீர்களே, அதைப் போல வின்ச்சில் மலைக்கு மேலே செல்ல வேண்டும். அங்கிருந்து கீழே பார்த்தால், breathtaking view! அவ்வளவு அழகான இடம் அங்கே இருக்கிறது என்பது சொற்ப பேருக்கு மட்டுமே தெரியும். அப்படி பாதுகாக்கப்பட்ட பகுதி. மலைகளால் சூழப்பட்ட ஒரு பொக்கிஷம் போல இருந்தது. கீழே கூகுள் சேட்டிலைட் வியூ கொடுத்து இருக்கிறேன். யோசித்துப் பாருங்கள் – மலை மேலிருந்து பார்க்கும்போது எப்படி இருந்து இருக்கும்! இத்தனை வருடங்கள் ஆனாலும் இன்னும் கூட கண்ணில் அந்த காட்சி அப்படியே இருக்கிறது! 

ஒரு முறை மவுன்ட் ரெய்னியர் நேஷனல் பார்க்கிற்கு சென்றிருந்தோம். சியாட்டில் ஏர்போர்ட்டிலிருந்து  வாடகைக் காரை எடுத்துக்கொண்டு மவுன்ட் ரெய்னர் நோக்கி சென்று கொண்டிருக்கிறோம். சியாட்டிலுக்கே உரிய மேக மூட்டம். மந்தமான வானிலை. கொஞ்சம்  கொஞ்சமாக மேக கூட்டங்கள் விலக, விலக, தூரத்தில் நெடிதுயரந்து ரெய்னர் மலை! கோவிலில் தரிசனத்திற்கு காத்துக் கொண்டு இருக்கும் போது திரையை விலக்கும் போது ஏற்படுமே, அப்படி ஒரு காட்சியனுபவம்! கடவுளே மலைவடிவாய் இருப்பதைப் போல. சுற்றிலும் மலைகள் சூழ்ந்த ஊரில் பிறந்து வளர்ந்தவனாக இருந்தாலும், நான் பார்த்த மலைகளிலேயே மவுன்ட் ரெய்னர் தான்  கம்பீரமான மலை! அத்தனை உயரமாக(14410 அடி!), மணிமகுடம் போல பனி மூடி, கிட்டத்தட்ட வானைத் தொட்டுக்கொண்டு அல்லது வானிலிருந்து இறங்கி வந்தது போல மிகப்பெரிய மலை! மேகக்கூட்டங்களுக்கு நடுவே மவுன்ட் ரெய்னர் மலை முகடு, அந்த மலையே வானத்தில் இருப்பது போன்று அசாதாரணமாக இருந்தது. அந்தக் காட்சியை ரசிப்பதற்காவே ஒரு் எக்ஸிட் எடுத்து, அருகிலிருந்த ஒரு ஏரிக்கரையோரம் நிறுத்தி, நிதானமாக கண் குளிர பார்த்து விட்டு பயணத்தைத் தொடர்ந்தோம். 

ராக்கி மவுன்டெய்ன் சென்றிருந்த போது முற்றிலும் எதிரான ஒரு அனுபவம். ஏதோ உந்துதலில் Old Fall River Scenic Roadல் நுழைந்து விட்டோம். ரோடு என்று அதை சொல்வதே தவறு. வெறும் மண்பாதை என்பதே சரியாக இருக்கும். பாதையின் தொடக்கத்திலேயே, இது ஒரு வழிப் பாதை, திரும்பி வர வழி கிடையாது என்று எச்சரிக்கை போர்டு வைத்திருப்பார்கள். அதாவது மலையில் ஏற ஆரம்பித்து விட்டால், பாதியில் பயந்து போய் திரும்பி வர வாய்ப்போ, வழியோ இல்லை.  முதல் 200 மீட்டர் வரைக்கும் பயமாக இருக்கவில்லை. அதற்கு மேலேப் போகப் போகத் தான் தெரிந்தது AWD இல்லாமல் அந்த பாதையில் செல்வது தற்கொலைக்குச் சமம். ஊட்டியின் ஹேர்பின் பென்டெல்லாம் ஒன்றுமே இல்லை என எண்ணும் அளவுக்கு அத்தனை குறுகலான, பெரும்பகுதி மண்ணால் ஆன பாதை. ஊட்டியிலாவது ரோட்டின் விளிம்புகளில் கல் வைத்து இருப்பார்கள். இங்கே பாதுகாப்பிற்காக எதுவுமே இருக்காது. ஒரு அடி தவறினால், மலையிலிருந்து குட்டிக்கரணம் தான்! சொர்க்கத்துக்கோ நரகத்துக்கோ டைரக்ட் டிக்கெட் வாங்கி விடலாம். அப்படிப் பட்ட பாதையில், வெறும் Toyota Camryல், பின் சீட்டில் ஆறு மாதக் குழந்தையை வைத்துக் கொண்டு, ஏதோ குருட்டு தைரியத்தில் ஏறி விட்டோம். ரியர் வியூ மிர்ரரில் பார்த்தால், பேயறைந்த மாதிரி பயத்தில் பின் சீட்டில் மனைவி. எனக்கோ, எப்படி ஒட்டப் போகிறோம் என்று உள்ளுக்குள்ளே உதறல். திரும்பிப் போகவும் வழியில்லை, எங்கேயும் நிறுத்தவும் முடியாது. பயத்தை வெளிக்காட்டாமல், முழுக் கவனத்துடன் கொஞ்சம் கூட அங்கே இங்கே கண் அசைக்காமல் ஒட்டி, ஓரு கட்டத்தில் இதற்கு மேலே நம் கையில் எதுவும் இல்லை என்று முடிவெடுத்து, காரில் கந்தசஷ்டிக் கவசத்தை ஒலிக்க விட்டு விட்டு, குல தெய்வத்தையும், மற்ற எல்லா தெய்வங்களையும் துணைக்கு அழைத்துக் கொண்டு ஒன்பது மைல் மலைப் பாதையை ஒரு வழியாக முக்கால் மணி நேரத்தில் கடந்து Alpine Visitor Centerஐ வந்தடைந்துவிட்டு அடைந்த நிம்மதி இருக்கிறதே, அதற்கு இணையே இல்லை!

நான் இப்போது இருக்கும் டாலஸ் நகரம் எவ்வளவு தட்டையானது என்றால், நான்கு திசைகளில் சுற்றிப் பார்த்தாலும் உயரமாக கண்ணுக்கு தெரிவது கட்டிடங்களாக இருக்கும் இல்லையென்றால் flyover பாலங்களாக இருக்கும்! இந்த ஊர் பாஷையில் சொல்வதென்றால் ‘Flat like pan cake’. அப்படியே மொழி பெயர்த்தால் ‘தோசையின் மேற்பரப்பைப் போல் ‘ தட்டையான ஊர்! கோவிடுக்குப் பின் அமெரிக்காவின் மேற்கு மற்றும் கிழக்கு கடற்கரை பகுதிகளில் இருந்து ஏராளமான மக்கள் இங்கு வந்து குடியேறி இருக்கிறார்கள். அதற்கு அவர்களுக்கு பல காரணங்கள் இருந்தாலும் எனக்கென்னவோ அவர்களைப் பார்த்து ஒரு விதமான பரிதாபமான உணர்வே ஏற்படுகிறது. இங்கிருந்து நான்கு மணி நேரம் எந்த திசையில் பயணித்தாலும் ஒரே மாதிரியான நிலப்பரப்புக்குள்ளேயே இருப்பது போல் தோன்றும். மலையோ, கடலோ, காடோ அருகில் இல்லாத ஊரில் இருப்பவர்கள் என் பார்வையில் பரிதாபத்திற்கு உரியவர்களே! 

எழுத்தாளர் நாஞ்சில்நாடன், க்ராண்ட் கேன்யன் பார்த்த அனுவபத்தை விவரிக்கும் போது, கடவுளையே பார்த்தது போல இருந்தது என்று சொல்லியிருப்பார். Solitude in nature brings us closer to God என்று Emersonனும், Thoreauவும் சொல்லியிருப்பதும் அதைத்தானே!

நம் மரபில் metaphor ஆக சொல்லப்பட்ட பல விஷயங்கள் காலப் போக்கில் கண்மூடித்தனமான மத நம்பிக்கைகளாகிப் போனது. மலைகள் தோறும் கோவில்கள் கட்டி வைத்த நம் முன்னோர்கள், சும்மா சாமி கும்பிடுவதற்காகத் தான் கட்டி வைத்தனர் என்று நினைக்கிறீர்களா? மலை ஒரு குறியீடு. இறைவனை அணுக வேண்டின், முதலில் இயற்கையை அறிய, அனுபவிக்கத் தெரிய வேண்டும். அதற்கு மலையை நோக்கிச் செல்ல வேண்டும் என்பதற்காகத் தான் மலைகள் மேல் கோவில்கள் கட்டி வைத்தார்கள் என்றே எனக்குப்படுகிறது.

ட்வோராக்கும் சிட்டுக்குருவியும்

சில நாட்களுக்கு முன் காரில் சென்று கொண்டிருக்கும் போது, FMல் ஆன்டோனின் ட்வோராக்கின் (Antonín Dvořák) Symphony No 9.  அதில் ஒரிடத்தில்  கேட்ட உடனேயே, மனதில் பதியும் ஒரு பீஸ் – ‘ஆகா, இதே மெட்டில் தமிழில் ஒரு பாட்டு இருக்கிறதே’ என போனை எடுத்துக் குறித்து வைத்துக் கொண்டேன்(வண்டி ஓட்டிக் கொண்டே!).  FM என்பதால், அந்த சந்தர்ப்பத்தை விட்டால், மீண்டும் அதே சிம்பொனி கேட்க வாய்ப்புக் கிடைப்பது அரிது. 

வீடு வந்தவுடன் நேரே மனைவியிடம் போய், ‘தத்..தத்..தரதாதத்..தத்..தரதா…’ இந்த மெட்டில் அமைந்த தமிழ்ப் பாட்டு ஏதாவது ஞாபகம் வருகிறதா எனக் கேட்கஅப்படி  எதுவும் கேட்ட மாதிரி ஞாபகம் இல்லையே என மனைவி சொல்லிவிட, என் மனதுக்குள் மட்டும் அந்த மெட்டு ஓடிக் கொண்டே இருந்தது. தத்..தத்..தரதாதத்..தத்..தரதா…  நான் பாடுவதைக் கேட்டு என் பையனும் , எங்கள் வீட்டு நாயும் மிரண்டு போய் எனைப் பார்க்க, இனிமேல் இவர்கள் முன்னே பாடக்கூடாது என்று மனதில் முடிவெடுத்துக் கொண்டேன்

அடுத்த நாள் எதேச்சையாக எங்கோ மனதின் மூலையிலிருந்து அந்த வார்த்தை எழுந்து வந்தது – ‘சிட்டுக்குருவி… தத்..தத்..தரதா… ‘. உடனே யூடுபில் தேடிப் பார்த்தால், முதல் பரிந்துரையிலேயே இருந்தது – “சிட்டுக்குருவி வெட்கப்படுது…’. 1985ல் பாக்யராஜ் இயக்கத்தில் வெளிவந்த சின்னவீடு திரைப்படத்தில் இளையராஜா இசையமைத்த பாடல். 

https://music.youtube.com/watch?v=01OLNQGKWPs

அந்த பாடலை ஒலிக்க விட்டுவிட்டு கூடவே ட்வோராக்கின் சிம்பொனியையும் சேர்த்து கேட்கும் போது வெஸ்டர்ன் க்ளாசிக்கில் இருந்து ஒரு சிறு துரும்பை எடுத்து இளையராஜா நம் தமிழ் காதுகளுக்கு ஏற்ற மாதிரி எவ்வளவு அழகாகக் கொடுத்துள்ளார் என ஆச்சர்யமாக இருந்தது.  சிலர் இது காப்பி இல்லையா என நினைக்கலாம். உண்மையில் ட்வோரோக்கின் சிம்போனியயையும், சிட்டுக்குருவி பாட்டையும் ஒன்றாக கேட்டால் தெரியும் அவர் அதிலிருந்து எடுத்திருப்பது ஒரு மிகச்சிறிய பகுதி. கர்நாடக சங்கீதத்தின் ராகங்களின் அடிப்படையில் அமைந்த எத்தனையோ பாடல்களைக் கேட்டிருப்போம். அதற்காக அந்த ராகங்களை காப்பி அடித்துவிட்டார் என்று சொல்வது எத்தனை அபத்தம். அதே போல, விரல் நுனியில்  இன்டர்நெட் போன்ற எந்த வசதியும் இல்லாத அந்த காலகட்டத்தில், தான் பயின்ற வெஸ்டர்ன் க்ளாசிக்கில் இருந்து நம் மக்களுக்கு இது பிடிக்கும் என்று நம் ரசனைக்கு ஏற்ற மாதிரி அவர் உருமாற்றி இதைக் கொடுத்துள்ளார்.  நம்மில் எத்தனை பேருக்கு வெஸ்டர்ன் க்ளாஸிக்கோ, கர்நாடக சங்கீதமோ பரிச்சயம் அல்லது ரசிக்கத் தெரியும்? இந்த பாட்டைக் கேட்ட பின்னர், அந்த சிம்போனியே என் மனதில் ‘தத்..தத்..தரதா… தத்..தத்..தரதா…’ என்று தான் ஓடிக் கொண்டிருக்கிறது. இளையராஜா அவர்களே ஓரு பேட்டியில் சொன்ன மாதிரி, இன்டர்நெட்டோ, செல்போனோ இல்லாத அந்த காலத்திலேயே மொஸார்ட்டையும், பீத்தோவனையும், பாஃக்கையும் நாமும் ரசிக்கும் அளவுக்கு நமக்குத் தெரியாமலேயே நம்மிடம் கொண்டுவந்தது சேர்த்தது அவரல்லவா! 

https://music.youtube.com/watch?v=KWQa-1HUCsQ

சிட்டுக்குருவி பாட்டில் கிட்டதட்ட பாட்டு முழுக்கவே bongos, bass guitar, drumms என அட்டகாசம் பண்ணியிருக்கிறார். ஒரிஜினலில் இருப்பதை விட கொஞ்சம் டெம்பொவையும் ஏற்றி இருப்பதால், சிம்பொனியை கேட்கும் போது நம் மனதில் எழும் உணர்விற்கும், சிட்டுக்குருவி பாட்டு  கேட்கும் போது நாம் உணர்வதும் முற்றிலும் வித்தியாசம். “தர தத் தத் தத்…” என்று தொடக்கத்தில் ஜானகியின் குரலைக்  கிட்டத்தட்ட ஒரு கருவி போல் பயன்படுத்தப்படுத்தியிருக்கிறார். ஜானகியின் குரலின் மென்மையும், அதே நேரத்தில் கூர்மையும் கிட்டத்தட்ட புளூட்டோ, கிளாரினெட்டோ போல ஒலிக்கிறது. Overlapping போல SPB, ஜானகியின் குரலோடு இணைந்து வரும் போது  பாட்டு வேறு உயரத்திற்கு செல்கிறது. பாஸ் கிட்டார் கிட்டத்தட்ட முழுப் பாட்டுக்கும்  கூடவே வருகிறது.   

பாட்டின் முழு போக்கும் call-and-response-ஐப் போல, SPB ஒரு teasing phrase விடுவார், Janaki அதற்கு mild-ஆக பதிலளிப்பார். Orchestration அந்த conversation-ஐத் தொடர்ந்து பேசும் மூன்றாவது குரலாக மாறுகிறது. எங்கே SPB வாக்கியத்தில் consonant sharpness இருக்கிறதோ, அங்கே percussion அதை highlight செய்யும். எங்கே Janaki வார்த்தையில் vowel elongation இருக்கிறதோ, அங்கே strings அதை underline செய்யும். பாடலை மீண்டும் மீண்டும் கேட்டுக் கொண்டே இருந்தால், வார்த்தைகளே கருவி மாதிரி ஒலிக்கத் தொடங்குகிறது. இசை, குரல், வார்த்தை – மூன்றுமே ஒன்றோடொன்று கலந்து, கலைந்து போவது  இளையராஜாவின் மாயாஜாலம் தான்.

முதல் interludeல்,  அருமையான ஒரு fluteஐ கொடுத்தவர், இரண்டாவது interludeல் முற்றிலும் western harmonyஐக் கொடுத்து, ஒரு பரிணாமத்தில் ஆரம்பித்த பாட்டை, இரண்டாம் பாதியில் இன்னொரு பரிணாமத்துக்கு எடுத்துச் செல்கிறார்.

பாட்டின் வரிகளை கீழே கொடுத்து இருக்கிறேன். டபிள் மீனிங் என்பதை கொஞ்சம் தள்ளி வைத்துவிட்டு, வார்த்தைகளை மட்டும் பாருங்கள். கிட்டதட்ட முழுவதுமே வல்லினத்திலேயே எழுதப் பட்டிருக்கிறது. ஒவ்வொரு வரியின் தொடக்கத்திலும் இரண்டாவது எழுத்து குற்றெழுத்து. ஒரு நான்கைந்து முறை பாடி அல்லது சும்மா படித்துப் பார்த்தாலே நமக்கு  நாக்கு சுளுக்கிக் கொள்ளும் tongue twisters.  ஆனால், SPBயின் குரல் எவ்வளவு லைட்டாக, effortless ஆக ஓடுகிறது பாருங்கள்; பாட்டின் அர்த்தம் புரிந்து புன்னகைத்துக் கொண்டே பாடியிருப்பார் என்று நினைக்கிறேன். பொதுவாக, ஜானகியும் SPBயும் இணைந்து பாடும் போது, ஜானகியின் குரலில் ஒரு dominance இருப்பதை கவனித்திருப்பீர்கள். ஆனால், இந்தப் பாட்டில் ஜானகியின் குரலில் அத்தனை மென்மை, குழைவு!

பாடல் முடிவடையும் போது, எப்படி ஆரம்பத்தில் ஜானகி குரல் மேல் SPB overlap செய்திருப்பாரோ, அதேப் போல, முடிவில் SPB குரல் மேல் ஜானகி குரல் overlap செய்வது போல பண்ணியிருப்பார்.

இந்த பாட்டைப் பற்றி இன்டர்நெட்டில் மேய்ந்து கொண்டிருக்கும் போது சேகரித்த சில சுவாரஸ்யமான தகவல்கள்:

  1. இளையராஜா இந்த மெட்டமைத்த பின்பு இது மிகவும் கடினமான மெட்டு, இதற்கு பாட்டு எழுதுவது கடினம் என்று சில கவிஞர்கள் முயற்சி செய்து பின்னர் பின்வாங்கிவிட்டனர்.
  2. வேறு வழியின்றி வைரமுத்துவை அழைத்து வர, அவர் சவாலான இந்த மெட்டுக்கு சவாலான பாட்டு என வேண்டுமெனவே வல்லினம் மிகுதியாக எழுதினாராம்!
  3. இவர்கள் இருவரின் சவாலை பாடும் போது அநாயசமாக கடந்து போயிருப்பார்கள் SPBயும் ஜானகியும். 
  4. இந்தப் பாட்டை கச்சேரிகளில் வெகு அபூர்வமாகவே கேட்க முடியும். கடினமான பாட்டு என்பதோடு பாடி முடித்தபின் வாய் வலிக்கும் என்பதால். 

பாட்டு நன்றாக இருக்கிறது என்பதற்காக தப்பித்தவறிக் கூட யூடூபில் இதன் வீடியோவை மட்டும் பார்த்து விடாதீர்கள். இவ்வளவு அழகான பாட்டை இதை விடக் கேவலமாக எடுக்க முடியாது என்கிற லட்சணத்தில் இருக்கிறது! ரீ ரிக்கார்டிங்கின் போது இளையராஜா எவ்வளவு நொந்து போயிருப்பார்!!!  

பாடல் வரிகள்:

“சிட்டுக்குருவி வெட்கப்படுது 

பெட்டைக்குருவி கற்றுத்தருது

தொட்டுப் பழகப்பழக 

சொர்க்கம் வருது 

கட்டித் தழுவத்தழுவ

கட்டில் சுடுது

அந்தப்புரமே வரமே தருமே

முத்திரை ஒத்தடம் இட்டதும் 

நித்திரை வருமே

சிட்டுக்குருவி வெட்கப்படுது 

பெட்டைக்குருவி கற்றுத்தருது

தொட்டுப் பழகப்பழக 

சொர்க்கம் வருது 

கட்டித் தழுவத்தழுவ

கட்டில் சுடுது

அந்தப்புரமே வரமே தருமே

முத்திரை ஒத்தடம் இட்டதும் 

நித்திரை வருமே

சிட்டுக்குருவி வெட்கப்படுது 

பெட்டைக்குருவி கற்றுத்தருது

தத்தை தத்தித் தவழும் 

தோளைத் தொத்தித் தழுவும் 

மெத்தை யுத்தம் நிகழும்

நித்தம் இந்தத் தருணம் 

இன்பம் கொட்டித் தரணும் 

என்றும் சரணம் சரணம்

இந்தக் கட்டில் கிளிதான் 

கட்டுப்படுமே 

விட்டுத் தருமே அடடா…

மச்சக்குருவி முத்தம் தருதே 

உச்சந்தலையில் 

பித்தம் வருதே

முத்தச்சுவடு சிந்தும் உதடு 

சுற்றுப் பயணம் எங்கும் வருமே

பட்டுச் சிறகுப் பறவை 

பருவச் சுமையைப் பெறுமே

சிட்டுக்குருவி வெட்கப்படுது 

பெட்டைக்குருவி கற்றுத்தருது

தொட்டுப் பழகப்பழக 

சொர்க்கம் வருது 

கட்டித் தழுவத்தழுவ

கட்டில் சுடுது

அந்தப்புரமே வரமே தருமே

முத்திரை ஒத்தடம் இட்டதும் 

நித்திரை வருமே

சிட்டுக்குருவி வெட்கப்படுது 

பெட்டைக்குருவி கற்றுத்தருது

நித்தம் எச்சில் இரவு 

இன்பம் மட்டும் வரவு 

நித்தம் முத்தச் செலவு

மொட்டுக்கட்டும் அழகு 

பட்டுக் கட்டும்பொழுது 

கிட்டத் தொட்டுப்பழகு

ஆஹா..கள்ளக்கனியே 

அள்ளச் சுகமே 

வெட்கப்பறவை விட்டுத்தருமோ

மன்னன் மகிழும் 

தெப்பக் குளமும் 

செப்புக் குடமும் இவளே

அங்கம் முழுதும் தங்கப்புதையல் 

மெத்தைக்கடலில் முத்துக்குளியல்

பட்டுச்சிறகுப் பறவை 

பருவச்சுமையைப் பெறுமே

சிட்டுக்குருவி வெட்கப்படுது 

பெட்டைக்குருவி கற்றுத்தருது

தொட்டுப் பழகப்பழக 

சொர்க்கம் வருது 

கட்டித் தழுவத்தழுவ

கட்டில் சுடுது

அந்தப்புரமே வரமே தருமே

முத்திரை ஒத்தடம் இட்டதும் 

நித்திரை வருமே

சிட்டுக்குருவி வெட்கப்படுது 

பெட்டைக்குருவி கற்றுத்தருது

தொட்டுப் பழகப்பழக 

சொர்க்கம் வருது 

கட்டித் தழுவத்தழுவ

கட்டில் சுடுது

அந்தப்புரமே வரமே தருமே

முத்திரை ஒத்தடம் இட்டதும் 

நித்திரை வருமே

சிட்டுக்குருவி.. 

சிட்டுக்குருவி.. 

வெட்கப்படுது.. 

வெட்கப்படுது.. 

பெட்டைக்குருவி.. 

பெட்டைக்குருவி.. 

கற்றுத்தருது..

கற்றுத்தருது..

தத்..தத்..தரதா…” 

நம்மைப் போல் இலர்

“Work from home” சொகுசு மெல்ல மறைந்து, மீண்டும் அலுவலகம் செல்வது இயல்பாகிக் கொண்டிருப்பதால், தினமும் குறைந்தது ஒரு மணி நேரமாவது பயணத்தில் கழிக்க வேண்டிய கட்டாயம். பயண நேரத்தில் பாட்காஸ்ட் கேட்பது பழக்கம். பெரும்பாலும் எகனாமிக்ஸ் அல்லது வரலாறு, சில நேரங்களில் நாட்டு நடப்புகள்.  சமீபத்தில் ஜெமோ தளத்தில் அவரின் unified wisdom பேச்சுக்கள் Spotifyயிலும் வெளியிடுகிறார்கள் என்பதைக் கண்டு ஆச்சரியப்பட்டேன். பரவாயில்லையே, இனி பயண நேரத்தில் ஜெமோவைக் கேட்போம் என்று சில நாட்களாக அவரின் பேச்சுக்களை தொடர்ந்து கேட்டு வருகிறேன். 

இன்று அவர் பேசிய தலைப்பு ‘இன்றைய தலைமுறையின் பொறுப்பின்மை’. https://open.spotify.com/episode/6hZm1v6Tltjo8rRitOHKfw?si=fk3fWyB6SK6XOR__e5YgFQ. அடுத்த தலைமுறை எப்படி செயல்படுகிறது என்பதை நேரில் பார்த்த அனுபவமுள்ள யாரும் இதை எளிதாக ஒப்புக் கொள்வார்கள். ஆனால் என்னை மிகவும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது வேறு ஒன்று. 

unified wisdom நடத்தும் பயிற்சி வகுப்புகளுக்கு வர சிலர் கேட்ட luxuries. அடப் பாவிகளா, இப்படி எல்லாம் கூட இருக்கிறார்களா என நிஜமாகவே திகைப்பை ஏற்படுத்தியது!  இத்தனை பொன்னான வாய்ப்புகள் வாசலில் வந்து கதவைத் தட்டும் போது கூட அதன் அருமை தெரியாது இருக்கிறார்கள் என்பது பெரும் ஏமாற்றமே. 

அதிலும் ஓரிருவர் பெங்களூர்/டெல்லி போன்ற பெரிய நகரங்களில் இருந்து நிகழ்ச்சியில் கலந்து கொள்ள, கவனியுங்கள், கலந்து கொள்ள, கற்றுக் கொடுக்க அல்ல, வருவதற்கு அமைப்பாளர்களிடமே பயணப்படி கேட்டார்கள் என்று அவர் சொன்ன போது இந்தப் பதர்கள் எத்தனை மண்டைக்கனம் உள்ளவர்களாக இருக்க வேண்டும் என்றே தோன்றியது. கார்ப்பொரேட் ட்ரெயினிங் என்று நினைத்துக் கொண்டிருப்பார்கள் போல. ஞானத்தை, அறிவை வழங்குகிறேன் என ஒருவர் அழைத்தால், அதற்கு பயணப்படி கேட்பேன் என ஒருவன் கூறுவானேல், அவனை மடையன் என்றல்லாமல் வேறென்ன சொல்வது?!

ஜெமோவை படிப்பவர்கள், பின் தொடர்பவர்கள் எப்படி இருப்பார்கள் என மனதில் ஒரு பிம்பம் இருந்தது – பண்பட்டவர்கள், செயல்திறம் கொண்டவர்கள், நல்ல ரசனையுள்ளவர்கள் என. நானறிந்த விஷ்ணுபுரம் நண்பர்கள் அனைவருமே அப்படிப்பட்டவர்கள் தான். ‘Classy’ என்று சொல்லத்தக்கவர்கள். ஆனால், இன்றைய பாட்காஸ்ட் கேட்டபின் மேற்கூறிய எந்த குணாதிசயங்களும் இல்லாதவர்களும் ஜெமோவை பின் தொடர்கிறார்கள் என்பது ஆச்சரியமாக இருக்கிறது. இவர்களுக்கு உள்மனம் உறுத்தாதா? பெங்களூரிலிருந்து ஈரோடுக்கு டாக்‌ஸியில்தான் வருவேன், 20000 பயணப்படி கொடுக்க முடியுமா என்று கேட்டவனை எந்த categoryயில் சேர்ப்பது என்று யோசித்துக் கொண்டிருக்கிறேன்!

பட்டாம்பூச்சி விளைவு

சரியாக பத்து நாட்கள் ஆகிறது – ஜெயமோகன் தளத்தில் ‘டாலஸ் சந்திப்பு’ தலைப்பில் நண்பர் ப்ரதீப் அவர்களின் பதிவைப் படித்து. 

ஜெமோ தன் தளத்தில் கடிதங்களை வெளியிடும்போது, பெரும்பாலும்   புகைப்படங்களுடன் சேர்த்து  வெளியிடுவதைக் கண்டு முன்பெல்லாம் நான் நினைத்ததுண்டு, எதற்காக புகைப்படங்களையும் சேர்த்து வெளியிடுகிறார் என. ஆனால் அந்த பதிவில் அவர் ‘டாலஸ் சந்திப்பு’ புகைப்படத்தை இணைத்திருக்காவிட்டால் கீழ் வரும் எதுவுமே நடந்திருக்காமல் போயிருக்கலாம். 

அந்த புகைப்படத்தை பார்த்த உடனே அதில் இருந்த செந்தில் அவர்களை அடையாளம் கண்டு கொண்டேன். செந்தில் நான் வசிக்கும் அதே பகுதியில் வசிப்பவர் மற்றும் இருமுறை அப்பகுதி தமிழர்கள் கூடிச் சந்தித்த போது அறிமுகம். பழகுவதற்கு எளிமையானவர், இனிமையானவர் என்பதோடு எங்கள் பக்கத்து மாவட்டத்துக்காரர் என்பதால் மனதில் பதிந்திருந்தார். அந்த புகைப்படத்தில் அவரைப் பார்த்த போது ஆச்சர்யமாக இருந்தது. அவர் தனக்கு இலக்கிய ஆர்வம் உண்டு என்றோ, தான் யூடூபில் திருக்குறள் சேனல் நடத்திவருவது குறித்தோ அந்த இரு சந்திப்புகளிலும் காட்டிக் கொள்ளவில்லை (அல்லது நான் கவனித்திருந்திருக்கவில்லை). அடுத்த முறை அவரைச் சந்திக்கும் போது டாலஸ் விஷ்ணுபுரம் வாசகர் வட்டம் பற்றி கேட்டு தெரிந்துக் கொள்ள வேண்டும் என்று நினைத்துக் கொண்டேன்.  The universe listens என்பது போல, அடுத்த நாளே, அவர் எங்கள் பகுதி வாட்ஸாப் தமிழ்க் குழுவில், விஷ்ணுபுரம் இலக்கியவட்டம் சார்பாக நடக்க இருக்கும் கம்ப ராமாயணக் கச்சேரி குறித்த அறிவிப்பை அவர் வெளியிட, அவர் நம்பரைக் குறித்துக் கொண்டு அவருக்கு ஒரு மெசஜ் தட்டலாம் என டைப் செய்துக் கொண்டிருக்கும் போதே, ஏதோ வேலை வர, அவசரத்தில் தவறுதலாக, அறைகுறை மெசஜ் அவருக்கு  போய்விட, அதை உடனடியாக டெலிட் செய்து விட்டு வேலையில் மூழ்கி விட்டேன். 

சாயங்காலமாக அவரிடமிருந்து ஒரு குறுந்செய்தி ‘தொடர்பு கொள்ள முயற்சி செய்தீர்களா’ என. உடனே அவரை போனில் அழைத்து ‘நீங்க திருநெல்வேலி செந்தில் தானே, நான் கணேஷ், நாகர்கோவில், இதற்கு முன்பு இருமுறை சந்தித்திருக்கிறோம்’ என அறிமுகப்படுத்திக் கொள்ள, அவர் ‘உங்கள் குரலை வைத்து அடையாளம் தெரிகிறது’ என்க, மலையாள வாசம் வீசும் நம் தமிழைத்தான் அப்படி நளினமாக சொல்கிறார் என நினைத்து லேசாக மனதில் சிரித்துக் கொண்டே, அவரிடம் நான் ஜெயமோகன் தளத்தை வாசிப்பதைக் குறித்தும், அதில் அவரின் புகைப்படத்தைப் பார்த்ததையும் சொன்னேன். அவருக்கும் ஆச்சர்யம். அவர் டாலஸ் விஷ்ணுபுரம் வாசகர் வட்டம் இரு வாரங்களுக்கு ஓரு முறை நூலகங்களில் சந்தித்து உரையாடுவதைப் பற்றி கூறி, வரும் ஞாயிறன்றும் ஃப்ரிஸ்கோ நூலகத்தில் கூட இருப்பதாகவும், முடிந்தால் வாருங்களேன் என அழைக்க, இலக்கியச் சந்திப்புகளில் பங்குபெறும் அளவிற்கு நமக்கு வாசிப்பு தகுதி இருக்கிறதா என்று உள்ளுக்கள்ளே ஒரு கேள்வி எழ, ஆனாலும் ஒருமுறை சென்று பார்க்கலாமே என்று அவரிடம் வருகிறேன் என்று சொல்லிவிட்டேன். அவர் வாட்சப் குரூப்பில் என்னை சேர்த்துவிடவும், சிறிது நேரத்தில் பிரதீப் அவர்கள் அழைத்து பேசினார்.

பிரதீப் அவர்களிடம் பேசும் போது நான் 2022ல் ஜெமோ டாலஸ் வந்திருந்த போது அந்நிகழ்ச்சிக்கு வந்திருந்ததைப் பற்றி கூற, அவர், ‘அப்படியா, அந்நிகழ்ச்சியில் எடுத்த புகைப்படம் இருந்தால் அனுப்புங்களேன், என்னால் அடையாளம் கண்டு கொள்ள முடிகிறதா எனப் பார்க்கிறேன்’ எனக் கூறி, வரும் ஞாயிறன்று நடைபெற இருக்கும் இலக்கியச் சந்திப்பு பற்றியும், டாலஸ் விஷ்ணுபுரம் வாசகர் வட்டம் பற்றியும் சுருக்கமாக விளக்கினார். நான் நமக்கு வாசிப்பு தகுதி இருக்கிறதா என எனக்குள் இருக்கும் தயக்கத்தை வெளிப்படுத்த, ‘பரவாயில்லை, வாருங்கள். இது நட்பார்ந்த கலந்துரையாடல்’ என்று ஊக்கப்படுத்தினார். சிறிது நேரத்திலேயே ஞாயிறன்று கலந்துரையாடுவதற்கான நான்கு கதைகளின் சுட்டியையும் கொடுத்து உதவினார். 

அந்த இலக்கியச் சந்திப்பிற்குப் பின் அவர்களிடமிருந்த ஏதோ ஒரு பொறி, என்னுள் அணைந்திருந்த கங்குகளை பற்ற வைத்ததைப் போல், மீண்டும் மீண்டும் அந்த கலந்துரையாடல் மனதுக்குள்ளே ஓடிக் கொண்டிருக்கவே, அதைப் பற்றிய நினைவுக்குறிப்புகளை பதிவு செய்யலாம் என்று தமிழில் தட்டச்சு செய்யலாம் என்று ஆரம்பித்து – கவனிக்க, நான் முன் பின்னே  தமிழில் தட்டச்சு செய்து பழக்கமில்லாதவன் – அது அப்படியே ஓரு வலைத்தளத்தை ஆரம்பிக்க வைத்தது. இப்போது திரும்பிப் பார்க்கும் போது, இந்த பத்து நாட்களில் கிட்டத்தட்ட 4000 வார்த்தைகள் தமிழில் டைப் செய்துள்ளேன். தினமும் மீண்டும் தமிழில் படிக்க , ஆழ்ந்து படிக்க ஆரம்பித்துள்ளேன். 

உலகில் எங்கோ ஓரு மூலையில் ஒரு பட்டாம்பூச்சி சிறகடிப்பதற்கும், வேறொரு மூலையில் சுனாமி வருவதற்கும் சம்பந்தம் இருக்கலாம் என்பது போல, எங்கோ இருந்து ஜெமோ வெளியிட்ட ஒரு பதிவு என்னுள் ஏற்படுத்திய மாற்றங்களை நினைத்துப் பார்க்கிறேன். 

நுலக அனுபவம்

பள்ளிப் பருவத்தில், நான் படித்த அரசுப்பள்ளியில் நூலகம் என்ற ஒன்று இருக்கவில்லை. எங்களூரில் ஒரு வாசிப்பு சாலை இருந்தது. நாளிதழ்கள், வார இதழ்களுக்கு மேலே புத்தகங்கள் என்று பெரிதாக சொல்லிக்கொள்ளும்படியாக அங்கு எதுவும் இருந்ததாக நினைவில்லை.

பதின்வயதில் நானாக பஸ் ஏறி நாகர்கோவில் செல்ல ஆரம்பித்த பின் செய்த முதல் காரியம், நாகர்கோவில் மைய நூலகத்தில் உறுப்பினர் அட்டை வாங்கியது. அப்போது மைய நூலகம் ஒழுகினசேரி டென்னிஸ் கிளப் அருகே ஒரு பழைய இரண்டு அடுக்கு கட்டிடத்தில் இருந்தது. கீழ்தளத்தில் நாளிதழ்களும், மேகஸின்களும், மேல் தளத்தில் புத்தகங்களும். எப்போதும் கீழ்தளத்தில் தூங்கி வழிந்தும், சோர்ந்த கண்களுடனும் சிலர் இருப்பார்கள். பெரும்பாலும் மத்திய வயதை கடந்தவர்கள் அல்லது வயசாளிகள். unwelcoming ambience என்பதை அந்த ஹாலின் எல்லா பக்கமும் உணரலாம். அதைத்தாண்டி மேல்தளம் சென்றால், அங்கே ஒரு அம்மணி (லைப்ரரியன்) உக்கிரமான பெண்தெய்வங்களை நினைவுறுத்துவது போல, எதற்காக வந்தாய் என்பது போல அமர்ந்திருப்பார். அவரைத்தாண்டிச் சென்றால் ஆறு புத்தக ரேக்குகள். ஒருவர் மட்டுமே சென்று வர இடைவெளி இருக்கும். கிட்டதட்ட அரை இருட்டில், காற்றே வராத அந்த இடத்தில் புத்தகங்களை தேடி எடுத்து வரும்போது வியர்வையில் நனைந்து பரிதாபமான ஒரு நிலையில் இருப்பேன். இப்போது யோசித்துப்பார்க்கும் போது அந்த அம்மணி எப்போதும் கோப நிலையில் இருந்ததின் காரணம் புரிகிறது. ஒருவர் தினமும் எட்டு மணி நேரம் அந்த இடத்தில் இருந்து வேலை செய்வது என்பது கிட்டதட்ட தன்டணையே தான்.

வேலை நிமித்தம் அமெரிக்கா வந்த பின், இதுவரை ஐந்து வெவ்வேறு மாகாணங்களில், வெவ்வேறு ஊர்களில் வசித்திருக்கிறேன். அந்த ஊர்களின் நூலகங்களை நன்றாக உபயோகித்திருக்கிறேன். எந்த ஓரு நூலகத்திலும் unwelcoming ஆக உணர்ந்ததேயில்லை. மாறாக, எல்லா நூலகங்களுமே வாசகர்கள் வர வேண்டும், குடும்பமாக வர வேண்டும், குழந்தைகளோடு வர வேண்டும் என்ற ரீதியிலேயே செயல்படுகிறார்கள். குழந்தைகளுக்கான தனி section இல்லாத எந்த நூலகத்தையும் இங்கு பார்த்ததேயில்லை. குழந்தைகளை சிறு வயதிலேயே புத்தகங்களுக்கும் நூலகங்களுக்கும் அறிமுகப்படுத்துவதால் அந்த குழந்தைகளும் நல்ல manners and maturity யோடு வளர்கிறார்கள்.

சமீபத்தில் ஃப்ரிஸ்கோ நூலகத்திற்கு செல்லும் வாய்ப்பு கிடைத்தது. புதியதாக கட்டப்பட்ட இந்த நூலகம் architecture மற்றும் kid-centric approachக்காக தேசிய அளவில் பேசப்பட்டது.

Rexy, a giant 21 foot tall T-rex replica remains on the floor of Frisco Public Library on Tuesday, March 14, 2023, in Frisco.

என்னைப்போன்ற பின்புலத்திலிருந்து வரும் ஒருவனுக்கு இந்த நூலகம் அளிக்கும் ஆச்சர்யம் வார்த்தைகளால் விவரிக்கமுடியாதது. நான் சென்றது ஒரு ஞாயிறு காலை. அப்போது கூட எத்தனை எத்தனை குழந்தைகள், குடும்பங்கள் நூலகம் நோக்கி வருவதை காணும் போது மனதில் ஒரு இனம்புரியா மகிழ்ச்சி, கூடவே ஒரு ஏக்கம் என்றாவது நம்மூரிலும் இதைப்போல் குழந்தைகளும் உபயோகிக்கும் வண்ணம் நூலகங்கள் வராதா என்று.

கைகாரி தோசை!

அ.முத்துலிங்கம் அவர்களின் ‘ஒரு சாதம்’ கதையை படித்திருக்கிறீர்களா? எனக்கு மிகவும் பிடித்த சிறுகதைகளில் ஒன்று. படிக்க எளிமையான ஆனால் மிக சுவாரஸ்யமான கதை. அ.முத்துலிங்கம் அவர்கள் ஒரு master story teller என்பதற்கு எவ்வளவோ உதாரணங்களை சொல்லலாம், ஆனால் எனக்கு மிகவும் பிடித்த கதைகளுள் இது ஒன்று. ஒரு சிறுகதைக்குள்ளே எத்தனை தகவல்கள், உட்கதைகள். கதைக்குள்ளே அவ்வையார் வருகிறார், காந்தி வருகிறார், ராமாயணம் வருகிறது, benzene அணு அடுக்கு முறை வருகிறது, முருகனின் சூரசம்ஹாரம் வருகிறது, chaos theory வருகிறது, கம்பியுட்டர் ப்ரோக்கிரம் வருகிறது. கொஞ்சமும் தொய்வில்லாத நடையில் எழுதபட்ட, எத்தனை முறை படித்தாலும் சலிக்காத கதை. இந்த கதை கிட்டதட்ட 30 வருடங்களுக்கு முன்பே எழுதப்பட்டது என்பது ஆச்சர்யமே.

சமீபத்தில் டாலஸ் நகர விஷ்ணுபுரம் இலக்கிய வட்ட வாசகர் சந்திப்பு கலந்துரையாடலுக்காக தேர்ந்தெடுக்கப்பட்ட நான்கு சிறுகதைகளில் இதுவும் ஒன்று. நீண்ட நாட்களுக்கு பிறகு தமிழில், அதுவும் அ.முத்துலிங்கம் அவர்களின் கதையைப் படிக்க பரிந்துரைத்த வாசகர் வட்ட நண்பர்களுக்கு நன்றி.

கதையின் தொடக்க பத்தியிலேயே, ‘வீட்டினுள்ளே சிவலிங்கம் ஒரு சாரமும், பனியனுமாக நின்றான்’, அதுவும் குளிர்காலத்தில் என்று படிக்கும்போதே, ‘ஆகா, நம் இனமடா’ என்று தோன்றியதை தவிர்க்க முடியவில்லை. தமிழ்நாட்டில் குமரி, நெல்லை மாவட்டக்காரர்களைத்தவிர, மற்றவர்கள் சாரம் என்பதை லுங்கி என்றே அறிந்திருப்பார்கள்.

கதையின் துவக்கத்திலேயே கதை மாந்தர்களின் பின்புலம் மற்றும் அவர்களின் குணங்களை நுணுக்கமாக காட்டிவிட்டு கதை ஜெட் வேகத்தில் செல்கிறது. சிவலிங்கம் தன் ஆரம்ப கால கனடா அனுபவங்களை பகிரும்போது பரமனாதன் இடத்தில் நாமே இருந்து கேட்பது போலவே இருந்தது.

Choas theoryஐ அவ்வையாரின் ‘வரப்புயற’ பாட்டை கொண்டு விளக்கியிருப்பது அருமை. அதே போல, ‘ஜானகியைக் கவர்ந்த காதல் எங்கே ஒளிந்த்திருக்கிறது என்று ராவணுனுடைய உடலை கூரிய அம்பினால் ஒட்டை போட்டு, ஒட்டை போட்டு தடவிப் பார்த்ததாம் ராமனுடைய பாணம். அதுபோலத்தான் எங்கேயோ ஒளிந்திருக்கும் அந்த பிழையைத் துருவித் துருவி தேடிப் பார்க்கிறேன்.’ என்ற வரிகளைப் படிக்கும் போது, எப்படி இவரால் இப்படியெல்லாம் சிந்திக்க முடிகிறது என்ற ஆச்சரியம் எழாமல் இல்லை.

கதையின் முடிவில், ‘oru sadham’ என்பது ஒரு சாதம் அல்ல, ஒரு சதம் என்பது தெளிவாகும் தருணத்தில்,பரமனாதனோடு சேர்ந்து நமக்கும் வரும் புன்னகை, கதையின் வெற்றி.

இந்தக் கதையை வாசிக்கும்போது எனக்கு ஒரு பழைய ஞாபகம் வந்தது. சுமார் பதினைந்து வடங்களுக்கு முன்பு நாங்கள் சிக்காகோவில் இருந்த போது, பக்கத்து ஊரில் ஒரு புதிய இந்தியன் ரெஸ்டாரண்ட் திறந்தார்கள். நண்பர்கள் அந்த புதிய இடத்தில் சாப்பிட்டுவிட்டு மிக நன்றாக இருக்கிறது என்று கூறவே, நானும் மனைவியும் ஒரு மாலை அங்கு சென்றோம். மெனு கார்டில் நிறய புதுப்புது ஐட்டங்கள். தோசை வரிசையில், புதிதாக கைகாரி தோசை என ஓன்று இருந்தது. வட இந்தியர்களால் நடத்தப்படும் ரெஸ்டாரென்ட் என்பதால் ‘Bikaniri’ போல கைகாரி ஏதோ ஊர் பெயராக இருக்கும் என்றெண்ணி மனைவி அதை ஆர்டர் செய்தார். சர்வரும் கைகாரி தோசை என்றே ஒப்பித்துவிட்டு சென்றார். சில நிமிடங்களில் தோசையும் வந்தது. நல்ல திட்டமான தோசை மேல் கேரட், பீட்ரூட், கொத்தமல்லி, கீரை எல்லாம் போட்டு.

அப்போது தான் எங்களுக்கு புரிந்தது, vegetable dosa எனபதைத்தான் அவர்கள் ‘kaikari dosa’ என்று போட்டிருக்கிறார்கள் என்று அதாவது காய்கறி தோசை!

‘oru sadham’,ஒரு சாதம் ஆனதைப்போல, ‘kaikari dosa’ஐ கைகாரி தோசை என்று படித்த எங்களை நினைத்து சிரித்துக்கொண்டேன்!

இலக்கியச் சந்திப்பு

இலக்கியச் சந்திப்புகளில் பங்குபெறும் அளவிற்கு நமக்கு வாசிப்பு தகுதி இருக்கிறதா என்ற சந்தேகத்துடனேதான் ஞாயிறன்று ஃப்ரிஸ்கோ நூலகத்தில் நடந்த விஷ்ணுபுரம் இலக்கியவட்ட வாசகர் சந்திப்பில் கலந்து கொள்ள புறப்பட்டேன்.

சிறுவயதிலிருந்து வாசிக்கும் பழக்கம் இருந்தும், முறையான பயிற்சியோ வழிகாட்டுதலோ இல்லாததும், கடந்த சில வருடங்களாக ஜெயமோகன் வலைத்தளத்தை தவிர தமிழில் வாசிப்பது மிகவும் குறைந்து விட்டதும் எனக்கு தயக்கத்தை உருவாக்கியது. நண்பர் செந்தில் அழைத்தபோது, “ஒருமுறை சென்று பார்த்துவிடலாமே” என்ற எண்ணத்துடன் அவரிடம் வருகிறேன் என சொன்னேன். அவர் என்னை வாட்ஸ்அப் குழுவில் சேர்த்ததும், பிரதீப் அவர்கள் அழைத்து கதைகளுக்கான சுட்டிகளை பகிர்ந்ததும் எனக்கு ஒரு நம்பிக்கையை வழங்கியது.


வாசிக்க வேண்டிய நான்கு கதைகள்

தேர்ந்தெடுக்கப்பட்ட கதைகள்:

  • அசோகமித்திரனின் ‘காந்தி’ மற்றும் ‘காலமும் ஐந்து குழந்தைகளும்’
  • அ. முத்துலிங்கத்தின் ‘கடவுச்சொல்’ மற்றும் ‘ஒரு சாதம்’

சந்திப்பிற்கு நான்கு நாட்களே இருந்ததால், தினமும் இரவில் ஒரு கதை என்று முடிவெடுத்தேன்.
என் மனதிற்கு நெருக்கமானவர் முத்துலிங்கம் என்பதாலும், அவருடைய பல கதைகளை ஏற்கனவே வாசித்திருந்ததாலும் கடவுச்சொல் கதையிலிருந்து தொடங்கினேன்.

பல வருடங்களுக்குப் பிறகு தமிழில் வாசிப்பதைப் பார்த்து என் மனைவிக்கும் மகனுக்கும் ஆச்சரியம்!
அ.முத்துலிங்கத்தின் இரண்டு கதைகளும் எளிதாக வந்தது. வாசித்த பின் அவருக்கு ஒரு கடிதம் எழுதும் பழைய பழக்கத்தையும் மீட்டெடுத்தேன்.

அசோகமித்திரனின் கதைகளை வாசிக்கும் போதே “புரிகிற மாதிரி, புரியாத மாதிரி” என்ற மனநிலை. “சந்திப்பில் கேட்டு விளக்கமெடுத்துக்கொள்வோம்” என்று விட்டுவிட்டேன்.


ஞாயிறு காலை 9 மணிக்கு நிகழ்ச்சி. 8:55-க்கு ஃப்ரிஸ்கோ நூலகத்தை வந்தடைந்தேன். ஏற்கனவே வாசகர் நண்பர்கள் அங்கே வந்திருந்தனர். நூலகம் திறந்ததும் நாங்கள் எட்டு பேர் ஒரு குழுவாக உள்ளே சென்றோம். வெங்கட் பின்னர் இணைந்து கொண்டார்.
அன்னபூரணா அவர்கள் விநாயகரை பாடி நிகழ்ச்சியை தொடங்கினார்கள்.


கதைகள் மற்றும் கலந்துரையாடல்கள்

‘காந்தி’ பற்றி முதலில் விவாதம் நடைபெற்றது. பாலாஜி அவர்கள், அசோகமித்திரனின் எழுத்து “writer’s writer” எனக் குறிப்பிட்டு, பல அடுக்குகள் கொண்ட எழுத்துமுறையை விளக்கினார். மூர்த்தி மற்றும் பிரதீப், காந்தியின் பல பரிணாமங்களைப் பற்றியும், அவர் இன்றும் பேசப்படும் ஒருவராக இருக்கின்ற நிலைப்பாட்டையும் விவாதித்தனர். செந்தில், கசப்பும் கனிவும் கதையின் உள் நயமாக இருப்பதை வெளிப்படுத்தினார். நான் தவறாக புரிந்திருந்த ஒரு வரியை, மூர்த்தி தெளிவாக்கினார். பாலாஜி, ஜெமோவின் ‘இன்றைய காந்தி’ கட்டுரையை வாசிக்க வேண்டும் என்று பரிந்துரை செய்தார்.

‘காலமும் ஐந்து குழந்தைகளும்’ எனக்கு சற்று பிடிபடாமல் இருந்த கதை. ஆனால் செந்தில், ஐந்து குழந்தைகளை ஐம்புலன்கள், அல்லது பஞ்சபூதங்களாகலாம் என ஒரு புதிய பார்வையை வழங்கினார். மூர்த்தி, நடுத்தர வர்க்க மனநிலையை கதையின் வழியே விவரித்தார். பிரதீப், கதையின் ஒரு காட்சியை தேவதையின் தேடல் என ஓவியப்படுத்தினார்.

‘ஒரு சாதம்’ கதையை, ராதா அவர்கள் நினைவில் இருந்து ழுமையாகச் சொன்னது பிரமிப்பாக இருந்தது.ஒரு சதம் என்பது சிவலிங்கம் கடுமையான உழைப்பு, நேர்மை, புத்திக்கூர்மையால் முன்னுக்கு வரும் ஒரு சதம் பேரில் ஒருவன் என்ற perspective நான் முற்றிலும் எதிர்பாராதது. 

கடைசியாக, ‘கடவுச்சொல்’ . ஏன் கடவுச்சொல் என்ற தலைப்பு என்பதில் ஆரம்பித்து, எப்படி அது ஆப்ரஹாமின் பாவமன்னிப்பாக எடுத்துக்கொள்ளலாம் என்று சென்றது. வெங்கட் இந்தக் கதை உணர்வுப்பூர்வமாக தன் பாட்டியை நினைவூட்டியதை பகிர்ந்து கொண்டார்.


என்ன கற்றுக்கொண்டேன்?

இந்த சந்திப்பில் கலந்துகொண்டிருக்காவிட்டால், இத்தனை புதிய perspectives தெரிந்துக்கொள்ளாமலேயே போயிருப்பேன்! உண்மையில் இவர்கள் பேச்சைக் கேட்கும்போது எனக்குள்ளே ஆச்சர்யமும், பிரமிப்புமே மேலிட்டது. அபாரமான ஞாபக சக்தியும், செறிவான மற்றும் தொடர்ச்சியான வாசிப்பனுபவமும் கொண்ட நண்பர்கள் சூழ இரண்டு மணிநேரம் செலவிட்டது ஒரு புதிய அனுபவம்.

இவர்களிடமிருந்து கற்றுக் கொண்ட இன்னொரு விஷயம் அவர்கள் ஒரு சிறுகதையை கிட்டதட்ட மாடர்ன் ஆர்ட் போல பார்க்கும் விதம். மாடர்ன் ஆர்ட்டில் எப்படி ஒவ்வொரு தூரிகை தீற்றலுக்கும், வண்ணங்களுக்கும் உள் அர்த்தம் இருக்ககூடுமோ அதைப் போல கதைக்குள்ளும் இருக்கும், இருக்க வேண்டும் என்று ஆழ்ந்து பார்க்கின்றனர். அறிமுகமோ பயிற்சியோ இன்றி மாடர்ன் ஆர்ட்டை ரசிக்க முடியாது அதைப்போல அவர்கள் அனைவருக்கும் வாசிப்பில் பயிற்சி இருந்ததாகவே எனக்குப்பட்டது. என் வாசிப்பு முறை ரவிவர்மா ஓவியத்தை ரசிப்பது போல. சகுந்தலா, துஷ்யந்தன் வருகிறானா என்று திரும்பி பார்க்கிறாள் என்ற அளவில் ரவிவர்மா ஓவியத்தை பார்க்க, ரசிக்க, அனுபவிக்கத் தெரியும். ஆனால், இந்த நண்பர்கள் ஒரு படி மேலே போய் காளிதாசனின் சாகுந்தலத்தில் இருந்து மேற்கோள் காட்டும் அளவுக்கு ஆழ்ந்த வாசிப்பு அனுபவம் கொண்டவர்கள் என்று தோன்றியது.


நன்றிகள்

  • செந்திலுக்கு, இந்த வாசகர் வட்டத்தை எனக்கு அறிமுகப்படுத்தியதற்கும்
  • பிரதீப்பிற்கு, கதைகள் அனுப்பி, கலந்துரையாடலுக்கு வழிவகுத்ததற்கும்
  • மற்றும்
  • இவை அனைத்துக்கும் மையப்புள்ளியாக இருக்கும் ஜெயமோகன் அவர்களுக்கு.